🔗

திர்மிதி: 691

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي رَأَيْتُ الهِلَالَ، قَالَ: «أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ»، قَالَ: نَعَمْ، قَالَ: «يَا بِلَالُ، أَذِّنْ فِي النَّاسِ أَنْ يَصُومُوا غَدًا»

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكٍ، نَحْوَهُ بِهَذَا الإِسْنَادِ.


பாடம்:

(பிறைப் பார்த்தவரின்) சாட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பது குறித்து வந்துள்ளவை.

691. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறையை பார்த்துவிட்டேன் என்று கூறினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம் என்று பதிலளித்தார். உடனே, பிலாலே! நாளை நோன்பு நோற்கவேண்டும் என மக்களிடம் அறிவிப்பு செய்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் கருத்துவேறுபாடு உள்ளது.

இந்தச் செய்தியை ஸிமாக் பின் ஹர்ப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களும் மற்றவர்களும், ஸிமாக் பின் ஹர்ப் —> இக்ரிமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரை விட்டுவிட்டு முர்ஸலாக அறிவித்துள்ளனர். ஸிமாக் பின் ஹர்ப் அவர்களின் அதிகமான மாணவர்கள் இவ்வாறே முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியின் பிரகாரமே அதிகமான கல்வியாளர்கள் முடிவு செய்து, ரமலான் மாத பிறையை ஒருவர் பார்த்து சாட்சி கூறினாலும் நோன்பு வைப்பதற்கு அவரின் சாட்சி ஏற்கப்படும் என்று கூறுகின்றனர். இப்னுல் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் (ரஹ்), கூஃபாவாசிகள் ஆகியோரின் கருத்தும் இதுவே.

இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள், நோன்பு வைப்பதற்கும் பிறை பார்த்த இருவரின் சாட்சி அவசியம் என்று கூறுகிறார்.

ஷவ்வால் மாத பிறை விசயத்தில் பிறை பார்த்த இருவரின் சாட்சி அவசியம் என்பதில் கல்வியாளர்களிடம் கருத்துவேறுபாடு இல்லை.