🔗

திர்மிதி: 70

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ: أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ


பாடம்:

சிறுநீர் கழிப்பதில் (கவனக்குறைவாக இருப்பது குறித்து) வந்துள்ள கண்டனம்.

70. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது, “நிச்சயமாக இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் பெரிய விஷயத்திற்காக வேதனை செய்யப்படவில்லை.

அவ்விருவரில் ஒருவர், தமது சிறுநீரிலிருந்து தம்மை மறைத்துக் கொள்பவராக இருக்கவில்லை. மற்றவர், கோள் சொல்லித் திரிபவராக இருந்தார்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூஹுரைரா (ரலி), அபூமூஸா (ரலி), அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அபூபக்ரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

முஜாஹித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மன்ஸூர் அவர்கள், முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இருவருக்கிடையில் தாஊஸ் அவர்களைக் குறிப்பிடவில்லை. அஃமஷ் அவர்கள் (இருவருக்கிடையில் தாஊஸ் அவர்களைக் கூறி) அறிவிக்கும் அறிவிப்புதான் மிகச் சரியானதாகும்.

வகீஃ (ரஹ்) அவர்களின் மாணவரான அபூபக்ர்-முஹம்மது பின் அபான்-அல்பல்கீ (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அவர் கூறினார்:

“இப்ராஹீமின்.. அறிவிப்பாளர்தொடரை மன்ஸூரை விட அஃமஷ் (ரஹ்) அவர்கள் தான் மனனம் செய்வதில் சிறந்தவர்” என்று வகீஃ (ரஹ்) அவர்கள் கூறியதை நான் (நேரடியாக) செவியேற்றுள்ளேன்.