🔗

திர்மிதி: 96

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفَرًا أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، إِلَّا مِنْ جَنَابَةٍ، وَلَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ»


96. நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

இந்தக் கருத்தில் வரும் ஒரு செய்தியை ஹகம் பின் உத்பா, ஹம்மாத் ஆகியோர் இப்ராஹீம் அந்நகஈ —> அபூஅப்துல்லாஹ் அல்ஜதலி —> குஸைமா பின் ஸாபித் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல.

யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறியதாக அலீ பின் மதீனி அவர்கள் கூறுகிறார்: இப்ராஹீம் அந்நக்ஈ அவர்கள், அபூஅப்துல்லாஹ்விடமிருந்து இந்த மஸ்ஹ் பற்றிய ஹதீஸை நேரடியாக கேட்கவில்லை என்று ஷுஃபா அவர்கள் கூறினார்.


மன்ஸூர் அவர்கள் கூறியதாக ஸாயிதா பின் குதாமா கூறுகிறார்:

நாங்கள் இப்ராஹீம் அத்தைமீ அவர்களின் அறையில் இருந்தோம், எங்களுடன் இப்ராஹீம் அந்நகஈ அவர்களும் இருந்தார். அப்போது இப்ராஹீம் அத்தைமீ அவர்கள், மேற்கண்ட செய்தியை அம்ர் பின் மைமூன் –> அபூஅப்துல்லாஹ் –> குஸைமா பின் ஸாபித் (ரலி) –> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்.


இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்களில் மிகச் சிறந்த ஹதீஸ் ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) அவர்களின் ஹதீஸ் ஆகும் என்று முஹம்மத் பின் இஸ்மாயீல் புகாரி அவர்கள் கூறினார்.

இந்த ஹதீஸின் படி, “உள்ளூரில் இருப்பவர் ஒரு பகல் ஒரு இரவுக்கும், பயணி மூன்று பகல் மூன்று இரவுக்கும் காலுறையின் மீது மஸ்ஹ் செய்யலாம்” என்று நபித்தோழர்கள், தாபிஈன்கள், மற்றும் அவர்களுக்குப் பின் வந்த மார்க்கமேதைகளான ஸுஃப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாஃபிஈ, அஹ்மத், இஸ்ஹாக் போன்றோர் கூறுகின்றனர்.


சில அறிஞர்கள் காலுறை மீது மஸ்ஹ் செய்வதற்கு ஒரு கால வரையறையை குறிப்பிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாலிக் பின் அனஸ் அவர்களின் கூற்றாகும். ஆனால், காலவரையறை நிர்ணயிப்பதே மிகச் சரியானதாகும்.


மேற்கண்ட ஹதீஸ் ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) அவர்களிடமிருந்து ஆஸிம் இடம்பெறாத அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.