🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10357

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ ثَلَاثًا، قَالَ: «هَلْ تَدْرُونَ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «الْوَلَايَةُ فِي اللهِ، وَالْحُبُّ فِي اللهِ، وَالْبُغْضُ فِي اللهِ»

قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذا عَرَفُوا دِينَهُمْ أَحْسَنُهُمْ عَمَلًا»

ثُمَّ قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ تَدْرِي أَيُّ الْمُؤْمِنِينَ أَعْلَمُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذَا اخْتَلَفُوا – وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ – أَبْصَرُهُمْ بِالْحَقِّ، وَإِنْ كَانَ فِي عَمَلِهِ تَقْصِيرٌ، وَإِنْ كَانَ يَزْحَفُ زَحْفًا»

ثُمَّ قَالَ: ” يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ عَلِمْتَ أَنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، لَمْ يَنْجُ مِنْهَا إِلَّا ثَلَاثُ فِرَقٍ، فِرْقَةٌ أَقَامَتْ فِي الْمُلُوكِ وَالْجَبَابِرَةِ، فَدَعَتْ إِلَى دِينِ عِيسَى، فَأُخِذَتْ فَقُتِلَتْ بِالْمَنَاشِيرِ، وَحُرِّقَتْ بِالنِّيرَانِ، فَصَبَرَتْ حَتَّى لَحِقَتْ بِاللهِ، ثُمَّ قَامَتْ طَائِفَةٌ أُخْرَى لَمْ تَكُنْ لَهُمْ قُوَّةٌ، وَلَمْ تُطِقِ الْقِيَامَ بِالْقِسْطَ، فَلَحِقَتْ بِالْجِبَالِ، فَتَعَبَّدَتْ وَتَرَهَّبَتْ، وَهُمُ الَّذِينَ ذَكَرَهُمُ اللهُ فَقَالَ {وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانَ اللهِ} [الحديد: 27] إِلَى {وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ} [الحديد: 16] ، وَفِرْقَةٌ مِنْهُمْ آمَنَتْ، فَهُمُ الَّذِينَ آمَنُوا وَصَدَّقُونِي، وَهُمُ الَّذِينَ رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ، وَهُمُ الَّذِينَ لَمْ يُؤْمِنُوا بِي وَلَمْ يُصَدِّقُونِي، وَلَمْ يَرْعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَهُمُ الَّذِينَ فَسَّقَهُمُ اللهُ “


10357. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்னு மஸ்ஊதே!” என்று அழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று மூன்று தடவை கூறினேன். அப்போது அவர்கள், “ஈமானின் (இறைநம்பிக்கையின்) கயிறுகளில் மிகவும் பலமானது எது என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “அல்லாஹ்விற்காக நேசம் கொள்வதும், அல்லாஹ்விற்காகவே பகைமை கொள்வதும், அல்லாஹ்விற்காகவே நட்பு பாராட்டுவதும் ஆகும்” என்று கூறினார்கள்.

மீண்டும் அவர்கள், “இப்னு மஸ்ஊதே!” என்று அழைத்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று கூறினேன். அவர்கள், “முஃமின்களில் (இறைநம்பிக்கையாளர்களில்) சிறந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “தங்கள் மார்க்கத்தைப் புரிந்து கொண்டு, அதில் அழகிய முறையில் செயல்படுபவர்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு அவர்கள், “இப்னு மஸ்ஊதே! இறைநம்பிக்கையாளர்களில் மிகுந்த அறிவுடையவர் யார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “(மக்களிடையே) கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது -அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்- எவர் சத்தியத்தை (உண்மையை) மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறாரோ அவரே அறிவுடையவர். அவரின் நற்செயல்களில் குறைவு இருந்தாலும், அவர் (அமல்செய்வதில்) தவழ்ந்து ஊர்ந்து செல்பவராக இருந்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

தொடர்ந்து அவர்கள் கூறினார்கள்: “இப்னு மஸ்ஊதே! பனூ இஸ்ராயீலர்கள் எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர் என்பதை நீர் அறிவீரா? அவற்றில் மூன்று பிரிவினரைத் தவிர மற்றவர்கள் வெற்றி பெறவில்லை.

முதல் பிரிவினர்: அரசர்களிடமும் கொடுங்கோலர்களிடமும் ஈஸா (அலை) அவர்களின் மார்க்கத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். அதனால் அவர்கள் பிடிக்கப்பட்டு, மரம் அறுக்கும் ரம்பங்களால் அறுக்கப்பட்டார்கள்; நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை (மரணம் வரை) பொறுமையுடன் இருந்தார்கள்.

இரண்டாம் பிரிவினர்: அவர்களுக்கு அநீதியை எதிர்க்கும் வலிமை இருக்கவில்லை. எனவே அவர்கள் மலைகளுக்குச் சென்று வணங்கி, துறவறம் மேற்கொண்டார்கள்.

இவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: “அவர்கள், தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள். (அல்குர்ஆன்: 57:27)

மூன்றாம் பிரிவினர்: அவர்கள் (ஈஸா-அலை- அவர்களுக்குப் பின்) என் மீது நம்பிக்கை கொண்டு என்னை உண்மைப்படுத்தினார்கள். அவர்கள் அந்த மார்க்கத்தை முறையாகப் பேணினார்கள்.

ஆனால் அவர்களில் அதிகமானோர் பாவிகளாகி விட்டனர். எவர்கள் என் மீது நம்பிக்கை கொள்ளாமல், என்னைப் பொய்ப்பித்து, இந்த மார்க்கத்தை முறையாகப் பேணவில்லையோ அவர்களையே அல்லாஹ் பாவிகள் என்று கூறுகிறான்.