🔗

திர்மிதி: 1002

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«المَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»


பாடம்:

இறந்தவருக்காக (ஒப்பாரி வைத்து) அழுவது வெறுப்புக்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

1002. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவரின் குடும்பத்தினர்கள், அவருக்காக (ஒப்பாரி வைத்து) அழுவதன் காரணமாக அவர் வேதனை செய்யப்படுகிறார்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள், இப்னு உமர் (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. உமர் (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இறந்தவருக்காக அழுவதை அறிஞர்களில் சிலர் மக்ரூஹ்-வெறுப்புக்குரிய செயல் என்று கருதுகிறார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, “இறந்தவருக்காக, அவருடைய வீட்டார்கள் அழுவதின் காரணமாக அவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறுகிறார்கள்.

இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள், “இறந்தவர் தனது வாழ்நாளில் (தமக்காக அழக் கூடாது என்று) அவர்களைத் தடுத்திருந்தால், அதனால் அவருக்கு எந்த வேதனையும் இருக்காது” என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள்.