தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6827 & 6828

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

விபசார(க் குற்ற)த்தை ஒப்புக்கொள்ளல்.

6827. & 6828. அபூ ஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிந் நபவீ பள்ளிவாசலில்) இருந்தோம். அப்போது (கிராமவாசி) ஒருவர் எழுந்து, ‘அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: தாங்கள் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே எங்களிடையே தீர்ப்பளிக்க வேண்டும்’ என்றார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி எழுந்து, ‘(ஆம்) எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்!’ என்று கூறினார். (பின்னர் அந்தக் கிராமவாசி) ‘என்னைப் பேச அனுமதியுங்கள்’ என்று கேட்டுக்கொள்ள நபி (ஸல்) அவர்கள், ‘பேசு!’ என்றார்கள்.

அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் சில அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்’ என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உன்னிடமே திருப்பித் தரப்படவேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்படவேண்டும்’ என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி, ‘உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!’ என்றார்கள். அவ்வாறே உனைஸ் அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். எனவே, அவளுக்கு உனைஸ் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.42

அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என்று அவர் கூறவில்லையா?’ எனக் கேட்டேன். அவர்கள் ‘இது தொடர்பாக எனக்குச் சந்தேகம் உள்ளது. எனவே, சில வேளைகளில் அதை அறிவிக்கிறேன். சில வேளைகளில் மெளனமாகி விடுகிறேன்’ என்று கூறினார்கள்.

Book : 86

(புகாரி: 6827 & 6828)

بَابُ الِاعْتِرَافِ بِالزِّنَا

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَفِظْنَاهُ مِنْ فِي الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ: أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، وَزَيْدَ بْنَ خَالِدٍ، قَالاَ:

كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ رَجُلٌ فَقَالَ: أَنْشُدُكَ اللَّهَ إِلَّا قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، فَقَامَ خَصْمُهُ، وَكَانَ أَفْقَهَ مِنْهُ، فَقَالَ: اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ وَأْذَنْ لِي؟ قَالَ: «قُلْ» قَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا فَزَنَى بِامْرَأَتِهِ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ، ثُمَّ سَأَلْتُ رِجَالًا مِنْ أَهْلِ العِلْمِ، فَأَخْبَرُونِي: أَنَّ عَلَى ابْنِي جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ، وَعَلَى امْرَأَتِهِ الرَّجْمَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ جَلَّ ذِكْرُهُ، المِائَةُ شَاةٍ وَالخَادِمُ رَدٌّ، عَلَيْكَ وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا» فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا

قُلْتُ لِسُفْيَانَ: لَمْ يَقُلْ: فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ؟ فَقَالَ: «الشَّكُّ فِيهَا مِنَ الزُّهْرِيِّ، فَرُبَّمَا قُلْتُهَا، وَرُبَّمَا سَكَتُّ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.