தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4355

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்து, “அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அப்துல்லாஹ் பின் கைஸ் வந்துள்ளேன்” என்று கூறி (அனுமதி கோரி)னேன். அவர்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. பிறகு (மீண்டும்) நான், “அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அபூமூசா (வந்துள்ளேன்). அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அஷ்அரீ (வந்துள்ளேன்)” என்று (இன்னும் இரண்டு முறை) அனுமதி கோரினேன். (அனுமதி கிடைக்காததால்) பிறகு நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்”என்று கூறினார்கள். நான் (மீண்டும்) வந்தபோது, “அபூமூசா! ஏன் திரும்பிச் சென்றீர்? நாம் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்தோம்” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறைக்குள்) உமக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி. இல்லாவிட்டால் நீர் திரும்பிவிடுக” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்”என்றேன்.

உமர் (ரலி) அவர்கள் “இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இப்படிச் செய்து விடுவேன்” என்று கூறினார்கள். ஆகவே, நான் (அன்சாரிகளின் அவைக்குச்) சென்றேன்.

உமர் (ரலி) அவர்கள், “அவருக்குச் சாட்சி கிடைத்தால் மாலையில் அவரைச் சொற்பொழிவு மேடைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். சாட்சி கிடைக்காவிட்டால் அவரை நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

மாலை நேரமானபோது என்னைக் கண்ட மக்கள், “அபூமூசா! நீர் என்ன சொல்கிறீர்? சாட்சி கிடைத்துவிட்டாரா?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் “ஆம், உபை பின் கஅப் (ரலி) அவர்களே (சாட்சி)” என்றேன். உமர் (ரலி) அவர்கள் “அவர் நேர்மையானவர்தாம்” என்று கூறி விட்டு, “அபுத்துஃபைல்! இவர் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). இதைக் குறித்து ஒன்றைக் கேள்விப்பட்டேன். அதை உறுதி செய்துகொள்ளவே விரும்பினேன்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், உமர் (ரலி) அவர்கள், “அபுல்முன்திர்! நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “ஆம், கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அதில் உமர் (ரலி) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்” என்று கூறியதும் அதற்குப் பின் உள்ளவையும் இடம்பெறவில்லை.

Book : 38

(முஸ்லிம்: 4355)

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ

جَاءَ أَبُو مُوسَى إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ هَذَا عَبْدُ اللهِ بْنُ قَيْسٍ، فَلَمْ يَأْذَنْ لَهُ، فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ هَذَا أَبُو مُوسَى، السَّلَامُ عَلَيْكُمْ هَذَا الْأَشْعَرِيُّ، ثُمَّ انْصَرَفَ، فَقَالَ: رُدُّوا عَلَيَّ رُدُّوا عَلَيَّ، فَجَاءَ فَقَالَ: يَا أَبَا مُوسَى مَا رَدَّكَ؟ كُنَّا فِي شُغْلٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الِاسْتِئْذَانُ ثَلَاثٌ، فَإِنْ أُذِنَ لَكَ، وَإِلَّا فَارْجِعْ» قَالَ: لَتَأْتِيَنِّي عَلَى هَذَا بِبَيِّنَةٍ، وَإِلَّا فَعَلْتُ وَفَعَلْتُ، فَذَهَبَ أَبُو مُوسَى. قَالَ عُمَرُ: إِنْ وَجَدَ بَيِّنَةً تَجِدُوهُ عِنْدَ الْمِنْبَرِ عَشِيَّةً، وَإِنْ لَمْ يَجِدْ بَيِّنَةً فَلَمْ تَجِدُوهُ، فَلَمَّا أَنْ جَاءَ بِالْعَشِيِّ وَجَدُوهُ، قَالَ: يَا أَبَا مُوسَى، مَا تَقُولُ؟ أَقَدْ وَجَدْتَ؟ قَالَ: نَعَمْ، أُبَيَّ بْنَ كَعْبٍ، قَالَ: عَدْلٌ، قَالَ: يَا أَبَا الطُّفَيْلِ مَا يَقُولُ هَذَا؟ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ يَا ابْنَ الْخَطَّابِ فَلَا تَكُونَنَّ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سُبْحَانَ اللهِ إِنَّمَا سَمِعْتُ شَيْئًا، فَأَحْبَبْتُ أَنْ أَتَثَبَّتَ.

– وَحَدَّثَنَاهُ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّهُ قَالَ: فَقَالَ: يَا أَبَا الْمُنْذِرِ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: نَعَمْ، فَلَا تَكُنْ، يَا ابْنَ الْخَطَّابِ، عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَذْكُرْ مِنْ قَوْلِ عُمَرَ: سُبْحَانَ اللهِ وَمَا بَعْدَهُ


Tamil-4355
Shamila-2154
JawamiulKalim-4017




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.