தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3349

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்னும் (4:125-வது) இறை வசனம்.

அல்லாஹ் கூறுகிறான்:

உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார்.  (16:120)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

திண்ணமாக இப்ராஹீம் உள்ளச்சத்துடன் மன்றாடி முறையிடக் கூடியவராகவும் இறையச்சமும், சகிப்புத் தன்மையும் உடையவராகவும் இருந்தார். (9:114)

அபூ மைஸரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114 ம்) இறை வசனத்தி(ன்மூலத்தி)ல் இடம் பெற்றுள்ள அவ்வாஹ் என்னும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் கருணையுள்ளமும் இரக்கமும், இளகிய மனமும் கொண்டவர் என்று பொருள் என்று கூறினார்கள்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நம்முடைய) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள்.

மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தின் பால்) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்’ என்று (அவர்களைவிட்டுவிடும்படி) கூறுவேன்.

அப்போது, ‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்’ என்று கூறுவார்கள். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா-அலை அவர்கள்) கூறியதைப் போல்,

‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே, நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்’ என்னும் (திருக்குர்ஆன் 05: 117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 60

(புகாரி: 3349)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا} [النساء: 125]

وَقَوْلِهِ: {إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ} [النحل: 120]: وَقَوْلِهِ: {إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ} [التوبة: 114]، وَقَالَ أَبُو مَيْسَرَةَ: الرَّحِيمُ بِلِسَانِ الحَبَشَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا، ثُمَّ قَرَأَ: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104]، وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ القِيَامَةِ إِبْرَاهِيمُ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ أَصْحَابِي أَصْحَابِي، فَيَقُولُ: إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ “: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي} [المائدة: 117]- إِلَى قَوْلِهِ – {العَزِيزُ الحَكِيمُ} [البقرة: 129]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.