தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4695

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 (முந்தைய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால், மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையெனில், (மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்து விட்டார்கள்; மேலும்,தங்களிடம் பொய்தான் சொல்லப்பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி அவர்களை வந்தடைந்தது எனும் (12:110ஆவது) வசனத் தொடர்.

 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறைஉதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட)க் கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களை வந்தடைந்தது’ என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 12:110) இவ்வசனத்தின் மூலத்தில் (‘பொய்யுரைக்கப்பட்டது என்பதைக் குறிப்பதற்குரிய சொல்லை) ‘குஃத்திபூ’ (தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது ‘குஃதிபூ’ (மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று கேட்டேன்.

‘குஃத்திபூ (தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்றே வாசிக்க வேண்டுமென ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள்.

உடனே, ‘தங்களின் சமுதாயத்தினர் தங்களைப் பொய்ப்பித்திருக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேம்க்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள். (ஆனால், ‘ழன்னூ – நபிமார்கள் சந்தேகித்தார்கள்’ என்று தானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகிறவாறு எப்படிப்பொருள் கொள்ளமுடியும்?)’ என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா(ரலி), ‘ஆம்! என் ஆயுளின் (இரட்சகன்) மீதாணையாக! அதை அவர்கள் உறுதியாக நம்பியே இருந்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், ‘ழன்னூ’ என்பதற்கு ‘நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ளவேண்டும்; ‘சந்தேகித்தார்கள்’ என்று பொருள் கொள்ளக்கூடாது)’ என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) அவர்களிடம் நான், ‘ ‘கத்குஃதிபூ’ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்ற நபிமார்கள் கருதலானார்கள்) என்று இருக்கலாமோ!’ என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள கூறினார்கள்: அல்லாஹ் காப்பாற்றட்டும்! நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை’ என்றார்கள்.

உடனே நான், ‘இந்த வசனம் (கூறும் பொருள்) தான் என்ன?’ என்று கேட்டேன். ஆயிஷா(ரலி), ‘இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தினர் தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என்று ஏற்று, அதன்பிறகு (தாம் ஏற்ற மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே போய், இறை உதவியும் தள்ளிப்போய்க்கொண்டிருந்த அந்த(ச் சூழ்) நிலையில்தான், அந்த இறைத்தூதர்கள், தம் சமுதாயத்தினரில் தம் செய்தியை பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டார்கள். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள் கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும், துன்பமும் துயரமும் நீண்டுகொண்டே சென்ற காரணத்தாலும்) நம்முடைய செய்தியைப் பொய்யென்று, கருதுகிறார்கள் என்றும் அந்த இறைத்தூதர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நம்முடைய உதவி அவர்களை வந்தடைந்தது’ (என்பதே அந்த வசனத்தின் பொருள்) என பதிலளித்தார்கள்.

Book : 65

(புகாரி: 4695)

بَابُ قَوْلِهِ: {حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ} [يوسف: 110]

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

قَالَتْ لَهُ وَهُوَ يَسْأَلُهَا عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى: {حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ} [يوسف: 110] قَالَ: قُلْتُ: أَكُذِبُوا أَمْ كُذِّبُوا؟ قَالَتْ عَائِشَةُ: «كُذِّبُوا» قُلْتُ: فَقَدِ اسْتَيْقَنُوا أَنَّ قَوْمَهُمْ كَذَّبُوهُمْ فَمَا هُوَ بِالظَّنِّ؟ قَالَتْ: «أَجَلْ لَعَمْرِي لَقَدِ اسْتَيْقَنُوا بِذَلِكَ» فَقُلْتُ لَهَا: وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا، قَالَتْ: «مَعَاذَ اللَّهِ لَمْ تَكُنِ الرُّسُلُ تَظُنُّ ذَلِكَ بِرَبِّهَا» قُلْتُ: فَمَا هَذِهِ الآيَةُ؟ قَالَتْ: «هُمْ أَتْبَاعُ الرُّسُلِ الَّذِينَ آمَنُوا بِرَبِّهِمْ، وَصَدَّقُوهُمْ فَطَالَ عَلَيْهِمُ البَلاَءُ، وَاسْتَأْخَرَ عَنْهُمُ النَّصْرُ حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ مِمَّنْ كَذَّبَهُمْ مِنْ قَوْمِهِمْ، وَظَنَّتِ الرُّسُلُ أَنَّ أَتْبَاعَهُمْ قَدْ كَذَّبُوهُمْ، جَاءَهُمْ نَصْرُ اللَّهِ عِنْدَ ذَلِكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.