தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2909

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக்கொண்டிருந்தபோது, நான் மெதுவாகச் செல்லக்கூடிய என் ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் எனக்குப் பின்னால் வாகனம் ஒன்றில் வந்துசேர்ந்து, தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ காணுகின்ற ஒட்டகங்களிலேயே மிக உயர்தரமானது போன்று ஓடலாயிற்று. நான் திரும்பிப் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்), “ஜாபிரே! என்ன அவசரம் உனக்கு?” என்று கேட்டார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ மணந்தது கன்னிப் பெண்ணையா, அல்லது கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணையே (மணந்தேன்)” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?” என்று கேட்டார்கள்.

பிறகு மதீனாவிற்கு வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு (இஷா) நேரம் வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். மேலும், “நீ (ஊருக்குச்) சென்றால் புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்து கொள்” என்றும் சொன்னார்கள்.

– ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து நாங்கள் திரும்பியபோது) எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைத் தாமதப்படுத்திவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “ஜாபிர்(தானா)?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “என்ன விஷயம் (ஏன் தாமதம்)?” என்று கேட்டார்கள். “எனது ஒட்டகம் களைத்துப் பலமிழந்து போனதால் நான் பின்தங்கிவிட்டேன்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாகனத்திலிருந்து) கீழே இறங்கி, முனைப்பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு “ஒட்டகத்தில் ஏறு” என்றார்கள். நான் ஒட்டகத்தில் ஏறினேன். (அது விரைந்தோடியது.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்திவிடாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ திருமணம் செய்து கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு, “கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்து கொண்டேன்)” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?” என்று கேட்டார்கள். நான், “எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்போது நீ ஊருக்குச் செல்லப்போகிறாய். ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்று கூறிவிட்டு, “உனது ஒட்டகத்தை (எனக்கு) விற்றுவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். நான் “சரி” என்றேன். அவர்கள் என்னிடமிருந்து ஓர் “ஊக்கியா” விலை பேசி அதை வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வந்து சேரும்வரை அதிலேயே நான் வந்தேன்.)

(எனக்கு முன்பே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச்) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நான் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். “இப்போது தான் வருகிறாயா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “உனது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் உள்ளே சென்று தொழுது விட்டுத் திரும்பிவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காக ஓர் “ஊக்கியா” எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்(துத் தந்)தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது “ஜாபிரை எனக்காக அழைத்துவா” என்றார்கள். அவ்வாறே நான் அழைக்கப்பட்டேன். நான் (என் மனதிற்குள்) “இப்போது எனது ஒட்டகத்தை எனக்கே திரும்பத் தந்துவிடுவார்களோ! அ(வ்வாறு ஒட்டகத்தையும் வாங்கிக்கொண்டு விலையையும் பெற்றுக்கொண்டு நபியவர்களைச் சிரமப்படுத்துவ)தைவிட வெறுப்பானது எனக்கு வேறொன்றுமில்லை” என்று கூறிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனது ஒட்டகத்தை நீயே எடுத்துக்கொள்; அதன் கிரயமும் உனக்கே” என்றார்கள்.

Book : 17

(முஸ்லிம்: 2909)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ

كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَلَمَّا أَقْبَلْنَا تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ لِي قَطُوفٍ، فَلَحِقَنِي رَاكِبٌ خَلْفِي، فَنَخَسَ بَعِيرِي بِعَنَزَةٍ كَانَتْ مَعَهُ، فَانْطَلَقَ بَعِيرِي كَأَجْوَدِ مَا أَنْتَ رَاءٍ مِنَ الْإِبِلِ، فَالْتَفَتُّ، فَإِذَا أَنَا بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا يُعْجِلُكَ يَا جَابِرُ؟» قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ، فَقَالَ: «أَبِكْرًا تَزَوَّجْتَهَا، أَمْ ثَيِّبًا؟» قَالَ: قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «هَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ» قَالَ: فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ، ذَهَبْنَا لِنَدْخُلَ، فَقَالَ: «أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا – أَيْ عِشَاءً – كَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ، وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ» قَالَ: وَقَالَ: «إِذَا قَدِمْتَ فَالْكَيْسَ الْكَيْسَ»

– حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ يَعْنِي ابْنَ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيَّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي، فَأَتَى عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي: «يَا جَابِرُ»، قُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا شَأْنُكَ؟» قُلْتُ: أَبْطَأَ بِي جَمَلِي، وَأَعْيَا فَتَخَلَّفْتُ، فَنَزَلَ فَحَجَنَهُ بِمِحْجَنِهِ، ثُمَّ قَالَ: «ارْكَبْ»، فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُنِي أَكُفُّهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَتَزَوَّجْتَ؟» فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: «أَبِكْرًا، أَمْ ثَيِّبًا؟» فَقُلْتُ: بَلْ ثَيِّبٌ، قَالَ: «فَهَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ» قُلْتُ: إِنَّ لِي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ، وَتَمْشُطُهُنَّ، وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: «أَمَا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ فَالْكَيْسَ الْكَيْسَ»، ثُمَّ قَالَ: «أَتَبِيعُ جَمَلَكَ؟» قُلْتُ: نَعَمْ، فَاشْتَرَاهُ مِنِّي بِأُوقِيَّةٍ، ثُمَّ قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْتُ الْمَسْجِدَ، فَوَجَدْتُهُ عَلَى بَابِ الْمَسْجِدِ، فَقَالَ: «الْآنَ حِينَ قَدِمْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: فَدَعْ جَمَلَكَ، وَادْخُلْ فَصَلِّ رَكْعَتَيْنِ، قَالَ: فَدَخَلْتُ فَصَلَّيْتُ، ثُمَّ رَجَعْتُ، فَأَمَرَ بِلَالًا أَنْ يَزِنَ لِي أُوقِيَّةً، فَوَزَنَ لِي بِلَالٌ، فَأَرْجَحَ فِي الْمِيزَانِ، قَالَ: فَانْطَلَقْتُ، فَلَمَّا وَلَّيْتُ، قَالَ: «ادْعُ لِي جَابِرًا»، فَدُعِيتُ، فَقُلْتُ: الْآنَ يَرُدُّ عَلَيَّ الْجَمَلَ، وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ، فَقَالَ: «خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ»


Tamil-2909
Shamila-715
JawamiulKalim-2673,
2674




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.