தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4179

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) ஏழைகளாக இருந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், “யாரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ அவர், மூன்றாம(வராகத் திண்ணைத் தோழர்களில் ஒரு)வரை அழைத்துச் செல்லட்டும். யாரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கிறதோ அவர் ஐந்தாவது அல்லது ஆறாவது பேரை அழைத்துச் செல்லட்டும்” என்று கூறினார்கள். (இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொன்னார்களோ அதைப் போல.

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேரை அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப் பேருடன் (தம் வீட்டுக்குச்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேருடன் வந்தபோது, வீட்டில் நானும் என் தந்தையும் என் தாயார் (உம்மு ரூமான்) அவர்களும் தாம் இருந்தோம்.

-“என் மனைவியும் எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் சேர்ந்து பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணும்…” என அவர்கள் குறிப்பிட்டார்களா என எனக்குத் தெரியவில்லை என்கிறார்கள் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள்.-

அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷா தொழுகை தொழும்வரை (அவர்களுடன்) தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்வரை அவர்களுடன் தங்கியிருந்துவிட்டு, இரவில் அல்லாஹ் நாடிய நேரம் கழிந்த பின்னர் வீட்டுக்குத் திரும்பிவந்தார்கள்.

அப்போது அவர்களுடைய துணைவியார் (அதாவது என் தாயார்), “உங்கள் விருந்தாளிகளை” அல்லது “உங்கள் விருந்தாளியை” உபசரிக்க வராமல் தாமாதமானதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்களுக்கு நீ இரவு உணவு அளிக்க வில்லையா?” என்று கேட்டார்கள். அதற்குத் துணைவியார், “நீங்கள் வராமல் உண்ண முடியாதென அவர்கள் மறுத்துவிட்டனர். நாங்கள் (உண்ணும்படி) கேட்டுக் கொண்டபோதும் (அவர்கள் சம்மதிக்காமல்) எங்களை மிகைத்துவிட்டனர்” என்று பதிலளித்தார்.

(என் தந்தை விருந்தாளிகளைக் கவனிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துச் சென்றிருந்ததால் என்னைக் கண்டிப்பார்களோ என்றஞ்சி) நான் சென்று ஒளிந்துகொண்டேன். அவர்கள், “தடியா!” என்று (கோபத்துடன்) அழைத்து, “உன் மூக்கறுந்து போக!” என்று (என்னை) ஏசினார்கள்.

(விருந்தாளிகளை நோக்கி) “மகிழ்ச்சியாக இல்லை; நீங்கள் உண்ணுங்கள்” என்று கூறினார்கள். (தம் வீட்டாரை நோக்கி, “என்னை எதிர்பார்த்துத்தானே விருந்தாளிகளுக்குச் சிரமம் கொடுத்துவிட்டீர்கள்! இதற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவள உணவை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகியது. இறுதியில் நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அந்த உணவு முன்பிருந்ததைவிடக் கூடுதலாகிவிட்டிருந்தது. அது முன்பிருந்த அளவிலோ, அல்லது அதைவிடக் கூடுதலாகவோ மாறியிருப்பதைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரிடம், “பனூ ஃபிராஸ் குலமகளே! என்ன இது?” என்று (வியப்புடன்) கேட்க, என் தாயார், “என் கண்குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது” என்று சொன்னார்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது சத்தியத்தை முறித்துவிட்டு) அதிலிருந்து உண்டார்கள். மேலும், “அதுவெல்லாம் (நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன் என நான் சத்தியம் செய்ததெல்லாம்) ஷைத்தானால் ஏற்பட்டதே” என்று கூறிவிட்டு, பிறகு அதிலிருந்து மேலும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள்.

பிறகு அந்த உணவு நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று. (அப்போது) எங்களுக்கும் ஒரு கூட்டத்தாருக்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஒப்பந்தக் காலம் முடிவுக்கும் வந்தது. (இனி அவர்கள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி ஒவ்வொருவருடனும் சில வீரர்களை ஒப்படைத்தார்கள்.

ஒவ்வொரு தளபதியுடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். எனினும், அப்படையினரிடம் அந்த உணவைக் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் அதிலிருந்து உண்டனர். (இவ்வாறே அவர்கள் அறிவித்தார்கள்) அல்லது அவர்கள் எப்படி அறிவித்தார்களோ அதைப் போல.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 36

(முஸ்லிம்: 4179)

حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الْقَيْسِيُّ، كُلُّهُمْ عَنِ الْمُعْتَمِرِ، وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: قَالَ أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، أَنَّهُ حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ

أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ، كَانُوا نَاسًا فُقَرَاءَ، وَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ مَرَّةً: «مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَلَاثَةٍ، وَمَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ أَرْبَعَةٍ فَلْيَذْهَبْ بِخَامِسٍ، بِسَادِسٍ» أَوْ كَمَا قَالَ: وَإِنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلَاثَةٍ، وَانْطَلَقَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشَرَةٍ، وَأَبُو بَكْرٍ بِثَلَاثَةٍ، قَالَ: فَهُوَ وَأَنَا وَأَبِي وَأُمِّي – وَلَا أَدْرِي هَلْ قَالَ: وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَ بَيْتِنَا وَبَيْتِ أَبِي بَكْرٍ – قَالَ: وَإِنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لَبِثَ حَتَّى صُلِّيَتِ الْعِشَاءُ، ثُمَّ رَجَعَ، فَلَبِثَ حَتَّى نَعَسَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ بَعْدَمَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللهُ، قَالَتْ لَهُ امْرَأَتُهُ: مَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ – أَو قَالَتْ: ضَيْفِكَ؟ – قَالَ: أَوَ مَا عَشَّيْتِهِمْ؟ قَالَتْ: أَبَوْا حَتَّى تَجِيءَ، قَدْ عَرَضُوا عَلَيْهِمْ فَغَلَبُوهُمْ، قَالَ: فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ، وَقَالَ: يَا غُنْثَرُ، فَجَدَّعَ وَسَبَّ، وَقَالَ: كُلُوا لَا هَنِيئًا، وَقَالَ: وَاللهِ لَا أَطْعَمُهُ أَبَدًا، قَالَ: فَايْمُ اللهِ، مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلَّا رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرَ مِنْهَا، قَالَ: حَتَّى شَبِعْنَا وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ، فَنَظَرَ إِلَيْهَا أَبُو بَكْرٍ فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثَرُ، قَالَ لِامْرَأَتِهِ: يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا؟ قَالَتْ: لَا وَقُرَّةِ عَيْنِي، لَهِيَ الْآنَ أَكْثَرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثَلَاثِ مِرَارٍ، قَالَ: فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ، وَقَالَ: إِنَّمَا كَانَ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ يَعْنِي يَمِينَهُ، ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً، ثُمَّ حَمَلَهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَصْبَحَتْ عِنْدَهُ، قَالَ: وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ، فَمَضَى الْأَجَلُ فَعَرَّفْنَا اثْنَا عَشَرَ رَجُلًا مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ اللهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ، إِلَّا أَنَّهُ بَعَثَ مَعَهُمْ فَأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ أَوْ كَمَا قَالَ


Tamil-4179
Shamila-2057
JawamiulKalim-3840




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.