தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19265

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்), உமர் பின் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரும் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்றோம். நாங்கள் அவர்கள் அருகில் அமர்ந்தபோது, அவர்களிடம், ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், “ஸைத் அவர்களே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டுள்ளீர்கள். அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுள்ளீர்கள். அவர்களுடன் சேர்ந்து அறப்போர்களில் கலந்துகொண்டுள்ளீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள். ஸைதே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். ஸைதே! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எங்களுக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், “என் சகோதரர் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு வயது அதிகமாகிவிட்டது; எனது காலம் கழிந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்ட சில ஹதீஸ்களை நான் மறந்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்கு அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் அறிவிக்காதவற்றைப் பற்றி என்னிடம் கேட்டு என்னைச் சிரமப்படுத்தாதீர்கள்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள “கும்மு” எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.

பிறகு, “(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்” என்று (மூன்று முறை) கூறினார்கள்.

அப்போது ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், “ஸைதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார் யார்? நபியவர்களின் துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், “நபியவர்களின் துணைவியரும் அவர்களின் குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்குத் தர்மம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்” என்று கூறினார்கள்.

அதற்கு ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் “அவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், “அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அகீல் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும்,ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாருமே (நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)” என்று பதிலளித்தார்கள்.

ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், “தர்மம் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 19265)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ حَيَّانَ التَّيْمِيُّ قَالَ:

انْطَلَقْتُ أَنَا وَحُصَيْنُ بْنُ سَبْرَةَ، وَعُمَرُ بْنُ مُسْلِمٍ، إِلَى زَيْدِ بْنِ أَرْقَمَ، فَلَمَّا جَلَسْنَا إِلَيْهِ قَالَ لَهُ: حُصَيْنٌ لَقَدْ لَقِيتَ يَا زَيْدُ خَيْرًا كَثِيرًا رَأَيْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَمِعْتَ حَدِيثَهُ، وَغَزَوْتَ مَعَهُ، وَصَلَّيْتَ مَعَهُ، لَقَدْ لَقِيتَ يَا زَيْدُ خَيْرًا كَثِيرًا حَدِّثْنَا يَا زَيْدُ مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا ابْنَ أَخِي، وَاللَّهِ لَقَدْ كَبُرَتْ سِنِّي، وَقَدُمَ عَهْدِي، وَنَسِيتُ بَعْضَ الَّذِي كُنْتُ أَعِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا حَدَّثْتُكُمْ فَاقْبَلُوهُ، وَمَا لَا فَلَا تُكَلِّفُونِيهِ، ثُمَّ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا خَطِيبًا فِينَا بِمَاءٍ يُدْعَى خُمًّا، بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، فَحَمِدَ اللَّهَ تَعَالَى، وَأَثْنَى عَلَيْهِ، وَوَعَظَ، وَذَكَّرَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، أَلَا يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَنِي رَسُولُ رَبِّي عَزَّ وَجَلَّ، فَأُجِيبُ، وَإِنِّي تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ، أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ فِيهِ الْهُدَى وَالنُّورُ، فَخُذُوا بِكِتَابِ اللَّهِ تَعَالَى، وَاسْتَمْسِكُوا بِهِ» فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ، وَرَغَّبَ فِيهِ. قَالَ: «وَأَهْلُ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي» ، فَقَالَ لَهُ حُصَيْنٌ: وَمَنْ أَهْلُ بَيْتِهِ يَا زَيْدُ؟ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ؟ قَالَ: إِنَّ نِسَاءَهُ مِنْ أَهْلِ بَيْتِهِ، وَلَكِنَّ أَهْلَ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ. قَالَ: وَمَنْ هُمْ؟ قَالَ: هُمْ آلُ عَلِيٍّ، وَآلُ عَقِيلٍ، وَآلُ جَعْفَرٍ، وَآلُ عَبَّاسٍ. قَالَ: أَكُلُّ هَؤُلَاءِ حُرِمَ الصَّدَقَةَ؟ قَالَ: نَعَمْ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19265.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




மேலும் பார்க்க : முஸ்லிம்-4782 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.