தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6262

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

உங்கள் தலைவரை நோக்கி எழு(ந்து செல்லு)ங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியது.40

 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்:

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) ‘பனூ குறைழா குலத்தார்’ (கைபர் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பிட ஸஅத் அவர்கள் (வாகனத்தில் அமர்ந்தபடி) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் தலைவரை’ அல்லது ‘உங்களில் சிறந்தவரை’ நோக்கி எழுந்திரு(ந்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடு)ங்கள்’ என்று (அன்சாரிகளை நோக்கிச்) சொன்னார்கள்.

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் (வந்து) நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்தபோது, ‘(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பளிக்கப் போகிறீர்கள்?)’ என்றார்கள்.

ஸஅத் (ரலி) அவர்கள், ‘இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்படவேண்டும். இவர்களுடைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்பட வேண்டும் என நான் தீர்ப்பளிக்கிறேன்’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அரசன் எவ்வாறு தீர்ப்பளிப்பானோ அவ்வாறு நீங்கள் தீர்ப்பளித்துவிட்டீர்கள்’ என்றார்கள்.41

மற்றோர் அறிவிப்பில், ‘உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்துள்ளார்கள்’ என்பது வரை இடம் பெற்றுள்ளது.

Book : 79

(புகாரி: 6262)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا إِلَى سَيِّدِكُمْ»

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي سَعِيدٍ

أَنَّ أَهْلَ قُرَيْظَةَ نَزَلُوا عَلَى حُكْمِ سَعْدٍ، فَأَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ فَجَاءَ، فَقَالَ: ” قُومُوا إِلَى سَيِّدِكُمْ أَوْ قَالَ: خَيْرِكُمْ ” فَقَعَدَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ» قَالَ: فَإِنِّي أَحْكُمُ أَنْ تُقْتَلَ مُقَاتِلَتُهُمْ، وَتُسْبَى ذَرَارِيُّهُمْ، فَقَالَ: «لَقَدْ حَكَمْتَ بِمَا حَكَمَ بِهِ المَلِكُ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: أَفْهَمَنِي بَعْضُ أَصْحَابِي، عَنْ أَبِي الوَلِيدِ، مِنْ قَوْلِ أَبِي سَعِيدٍ: «إِلَى حُكْمِكَ»





2 comments on Bukhari-6262

  1. சலாம் அலைக்கும் என் பெயர் அப்துல் ரஷீத் என் போன்றவர்கள் அரபிக் கிராமர் தெரியாதவர்கள் இருந்தாலும் என்னிடம் இருந்து ஒரு செய்தி அறிந்ததும் பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்கிற அதை அடிப்படையாகக் கொண்டு நான் செய்து வருகிறேன் எங்களுக்கு புரியும் வகையில் விளக்கம் தாருங்கள்

    1. வ அலைக்கும் ஸலாம்.

      இந்த ஹதீஸில் உங்களுக்கு என்ன விளக்கம் வேண்டும் என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை.

      இந்தக் ஹதீஸின் கருத்து:
      மதீனாவில் வாழ்ந்த பனூகுரைளா யூதர்கள் முஸ்லிம்களை அழிப்பதற்கு மிகப்பெருமளவில் ஆயுதங்களை ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் பனூகுரைளா போர் நடைப்பெற்றது. யூதர்களின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. இவர்கள் அவ்ஸ் கிளையை சேர்ந்த நபித்தோழர்களிடம் சில ஒப்பந்தங்களை செய்திருந்தனர். எனவே தான் நபித்தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவர்களை கொன்றுவிடாமல் கைனுகா யூதர்கள் விசயத்தில் நடந்ததைப்போன்று நடக்கவேண்டும் என்று கூறினர். அதற்கு தான் நபி (ஸல்) அவர்கள் உங்கள் தலைவர் சொல்வதின் படி தீர்ப்பு இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டார்கள். அவர்கள் சரி என்று கூறிய பின்பே, அவ்ஸ் கிளையின் தலைவர் ஸஅத் பின் முஆதை அழைத்துவரப்பட்டது. அகழ்போரில் அவர்களின் காலில் அம்பு பாய்ந்ததால் பனூகுரைளா முற்றுகைக்கு அவர்கள் வரவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் ஸஅதை அழைத்துவர ஆளனப்பினார்கள்.

      அவருக்காக எழ சொன்னது , அவரின் காலில் ஏற்பட்ட காயத்தினால் அவரால் வாகனத்திலிருந்து இறங்கமுடியாது என்பதால் உதவிசெய்வதற்கு தான்.

      நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை உணர்ந்தே ஸஅத் பின் முஆத் அவர்களும் அப்படி தீர்ப்பளித்தார்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.