தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6565

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் ‘(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே!’ என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் ‘அல்லாஹ் தன்னுடைய கையால் உங்களைப் படைத்தான். தன்(னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தனர். எனவே, (இந்தத் துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி) எங்களுக்காக நம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கூறுவார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு, (உலகில்) தாம் புரிந்தவற்றை அவர்கள் நினைவுகூருவார்கள். பிறகு ‘நீங்கள் (எனக்குப் பின்) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நபி நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறி, (உலகில்) தாம் புரிந்தவற்றை நினைவுகூர்ந்து ‘அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீமிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்களும் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு, தாம் புரிந்த தவற்றை நினைவு கூருவார்கள். பிறகு ‘அல்லாஹ் உரையாடிய (நபி) மூஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள்நினைவு கூர்ந்தபடி ‘நபி(ஸல்) ஈசாவிடம் செல்லுங்கள்!’ என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள். அப்போது அவர்கள் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அவர் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்’ என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் சிரம்பணிந்தவனாக சஜ்தாவில் விழுந்து விடுவேன். அவன் நாடிய நேரம் வரை (நான் விரும்பியதைக் கோர) என்னைவிட்டுவிடுவான். பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) ‘உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும. சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று என்னிடம் கூறப்படும். உடனே நான் என்னுடைய தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு, நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று சிரம் பணிந்தவனாக சஜ்தாவில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம் முறை அல்லது நான்காம் முறை செய்வேன். இறுதியாகக் குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கமாட்டார்கள்.

என அனஸ் (ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பார்களில் ஒருவரான கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள், ‘குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர’ என்பதற்கு விளக்கமாக, ‘நிரந்தர நரகம் கட்டாயமாம்விட்டவர்களைத் தவிர’ என்று கூறுவார்கள். 139

Book :81

(புகாரி: 6565)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ القِيَامَةِ، فَيَقُولُونَ: لَوِ اسْتَشْفَعْنَا عَلَى رَبِّنَا حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا، فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ: أَنْتَ الَّذِي خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ المَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّنَا. فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ خَطِيئَتَهُ، وَيَقُولُ: ائْتُوا نُوحًا، أَوَّلَ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ خَطِيئَتَهُ، ائْتُوا إِبْرَاهِيمَ الَّذِي اتَّخَذَهُ اللَّهُ خَلِيلًا، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ خَطِيئَتَهُ، ائْتُوا مُوسَى الَّذِي كَلَّمَهُ اللَّهُ، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، فَيَذْكُرُ خَطِيئَتَهُ، ائْتُوا عِيسَى فَيَأْتُونَهُ، فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، فَيَأْتُونِي، فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي، فَإِذَا رَأَيْتُهُ وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ، ثُمَّ يُقَالُ لِي: ارْفَعْ رَأْسَكَ: سَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَرْفَعُ رَأْسِي، فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِي، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، ثُمَّ أُخْرِجُهُمْ مِنَ النَّارِ، وَأُدْخِلُهُمُ الجَنَّةَ، ثُمَّ أَعُودُ فَأَقَعُ سَاجِدًا مِثْلَهُ فِي الثَّالِثَةِ، أَوِ الرَّابِعَةِ، حَتَّى مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ القُرْآنُ ” وَكَانَ قَتَادَةُ، يَقُولُ عِنْدَ هَذَا: «أَيْ وَجَبَ عَلَيْهِ الخُلُودُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.