தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2328

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மக்கள் சிலருடன் இருந்தபோது, ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்:

முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் தனியாக ஹஜ்ஜுக்காக மட்டும் “இஹ்ராம்” கட்டி “தல்பியா” சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (ஹஜ்ஜுக்கு “இஹ்ராம்” கட்டியவர்களாக) வந்தார்கள். அப்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள்: “இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (உங்கள்) மனைவியருடன் உடலுறவு கொள்ளுங்கள்” என்றார்கள்.

– அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடுவதை நபி (ஸல்) அவர்கள் கட்டாயமாக்கவில்லை. மாறாக, அதை அனுமதிக்கவே செய்தார்கள். –

தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அப்போது நாங்கள், “நமக்கும் அரஃபாவுக்குமிடையே ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாம் நம் மனைவியருடன் உறவுகொள்ள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடுகிறார்களே! நம் இனஉறுப்புகளில் இந்திரியத் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க, (மனைவியருடன் கூடிய பின் உடனடியாக) நாம் அரஃபாவுக்குச் செல்வதா?” என்று (வியப்புடன்) பேசிக்கொண்டோம்.

– அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறியபோது ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கையை அசைத்து சைகை செய்து காட்டியதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

(ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் பேசிக்கொண்டதைக் கேள்விப்பட்ட) நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து, “நான் உங்களையெல்லாம் விட அல்லாஹ்விற்கு மிகவும் அஞ்சுபவனும், மிகவும் உண்மை பேசுபவனும், அதிகமாக நன்மை புரிபவனும் ஆவேன் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். நான் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால்,நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதைப் போன்று நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். (ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ராச் செய்யலாம் என) நான் பின்னர் அறிந்ததை முன்னரே அறிந்திருந்தால், எனது பலிப்பிராணியை நான் கொண்டுவந்திருக்கமாட்டேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள்!” என்றார்கள். நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்.

அப்போது (யமன் நாட்டில்) ஸகாத் வசூலிக்கும் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அலீ (ரலி) அவர்கள் (ஹஜ்ஜுக்கு) வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீர் எதற்காக “இஹ்ராம்” கட்டி, “தல்பியா” சொன்னீர்?” என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக “இஹ்ராம்” கட்டியுள்ளார்களோ அதற்காகவே “இஹ்ராம்” கட்டியுள்ளேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “நீர் இஹ்ராமிலேயே நீடித்து, (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடுவீராக!” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளும் இச்சலுகை) இவ்வாண்டிற்கு மட்டுமா? அல்லது என்றைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “என்றைக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2328)

وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا، فِي نَاسٍ مَعِي قَالَ

أَهْلَلْنَا، أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِالْحَجِّ خَالِصًا وَحْدَهُ، قَالَ عَطَاءٌ: قَالَ جَابِرٌ: فَقَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صُبْحَ رَابِعَةٍ مَضَتْ مِنْ ذِي الْحِجَّةِ، فَأَمَرَنَا أَنْ نَحِلَّ، قَالَ عَطَاءٌ: قَالَ «حِلُّوا وَأَصِيبُوا النِّسَاءَ» قَالَ عَطَاءٌ: وَلَمْ يَعْزِمْ عَلَيْهِمْ، وَلَكِنْ أَحَلَّهُنَّ لَهُمْ، فَقُلْنَا: لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلَّا خَمْسٌ، أَمَرَنَا أَنْ نُفْضِيَ إِلَى نِسَائِنَا، فَنَأْتِيَ عرَفَةَ تَقْطُرُ مَذَاكِيرُنَا الْمَنِيَّ، قَالَ: يَقُولُ جَابِرٌ بِيَدِهِ – كَأَنِّي أَنْظُرُ إِلَى قَوْلِهِ بِيَدِهِ يُحَرِّكُهَا – قَالَ: فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا، فَقَالَ: «قَدْ عَلِمْتُمْ أَنِّي أَتْقَاكُمْ لِلَّهِ وَأَصْدَقُكُمْ وَأَبَرُّكُمْ، وَلَوْلَا هَدْيِي لَحَلَلْتُ كَمَا تَحِلُّونَ، وَلَوْ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ لَمْ أَسُقِ الْهَدْيَ، فَحِلُّوا» فَحَلَلْنَا وَسَمِعْنَا وَأَطَعْنَا، قَالَ عَطَاءٌ: قَالَ جَابِرٌ: فَقَدِمَ عَلِيٌّ مِنْ سِعَايَتِهِ، فَقَالَ: «بِمَ أَهْلَلْتَ؟» قَالَ: بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا» قَالَ: وَأَهْدَى لَهُ عَلِيٌّ هَدْيًا، فَقَالَ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ: يَا رَسُولَ اللهِ، أَلِعَامِنَا هَذَا أَمْ لِأَبَدٍ؟ فَقَالَ: «لِأَبَدٍ»


Tamil-2328
Shamila-1216
JawamiulKalim-2138




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.