தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3639

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28

ஹுனைன் போர்.

 அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்துகொண்டேன். (போர் உக்கிரமாக நடந்தபோது) நானும் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இருந்தோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குரிய வெள்ளைக் கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அந்தக் கழுதையை ஃபர்வா பின் நுஃபாஸா அல்ஜுதாமீ என்பார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களும் மோதிக்கொண்டபோது முஸ்லிம்கள் புறமுதுகிட்டு ஓடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ (நிலைகுலையாமல்) தமது கோவேறு கழுதையை இறைமறுப்பாளர்களை நோக்கி விரட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுதையின் கடிவாளத்தைப் பிடித்து, அது விரைவாகச் சென்று விடக் கூடாது என்பதற்காக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தின் சேணத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்பாஸ்! கருவேல மரத்தின் (கீழ் “ரிள்வான்” உடன்படிக்கை செய்த) தோழர்களை அழையுங்கள்” என்று கூறினார்கள். நான் உரத்த குரலில் “கருவேல மரத்தின் (கீழ் “ரிள்வான்” ஒப்பந்தம் செய்த) நண்பர்கள் எங்கே?” என்று அழைத்தேன். (அப்பாஸ் (ரலி) அவர்கள் உரத்த குரலுடையவராக இருந்தார்கள்.)

அல்லாஹ்வின் மீதாணையாக! (பிரிந்தோடிய) முஸ்லிம்கள், எனது குரலைக் கேட்டவுடன் பசு தன் கன்றுகளை நோக்கித் தாவிவருவதைப் போன்று “இதோ வந்துவிட்டோம்; இதோ வந்துவிட்டோம்” என்று கூறியவாறு தாவிவந்து இறைமறுப்பாளர்களுடன் போரிட்டனர்.

அன்சாரிகளிடையே “அன்சாரிகளே! அன்சாரிகளே!” என்று அழைப்பு விடுக்கப்பட்டது. பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டியிருந்தது. அப்போது அவர்கள், “பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே! பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே!” என்று அழைத்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கோவேறுகழுதையில் அமர்ந்தவாறு தலையை உயர்த்தி சண்டையைக் கவனித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கல் அடுப்பு கனன்றுகொண்டிருக்கும் நேரமிது” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி இறைமறுப்பாளர்களின் முகத்தில் எறிந்தார்கள். பிறகு “முஹம்மதின் இறைவன் மீதாணையாக! அவர்கள் தோற்றனர்” என்று கூறினார்கள்.

நான் பார்த்துக்கொண்டே போனேன். அப்போது போர் தனது போக்கில் (உக்கிரமாக) நடந்துகொண்டிருந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிந்ததுதான் தாமதம்; இறைமறுப்பாளர்களின் பலம் குன்றிக்கொண்டே செல்வதையும் அவர்களின் கதை முடிவுக்கு வருவதையுமே நான் காணலானேன்.

Book : 32

(முஸ்லிம்: 3639)

وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي كَثِيرُ بْنُ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ: قَالَ عَبَّاسٌ

شَهِدْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ حُنَيْنٍ، فَلَزِمْتُ أَنَا وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ نُفَارِقْهُ، وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَةٍ لَهُ بَيْضَاءَ أَهْدَاهَا لَهُ فَرْوَةُ بْنُ نُفَاثَةَ الْجُذَامِيُّ، فَلَمَّا الْتَقَى الْمُسْلِمُونَ وَالْكُفَّارُ وَلَّى الْمُسْلِمُونَ مُدْبِرِينَ، فَطَفِقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْكُضُ بَغْلَتَهُ قِبَلَ الْكُفَّارِ، قَالَ عَبَّاسٌ: وَأَنَا آخِذٌ بِلِجَامِ بَغْلَةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكُفُّهَا إِرَادَةَ أَنْ لَا تُسْرِعَ، وَأَبُو سُفْيَانَ آخِذٌ بِرِكَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْ عَبَّاسُ، نَادِ أَصْحَابَ السَّمُرَةِ»، فَقَالَ عَبَّاسٌ: وَكَانَ رَجُلًا صَيِّتًا، فَقُلْتُ بِأَعْلَى صَوْتِي: أَيْنَ أَصْحَابُ السَّمُرَةِ؟ قَالَ: فَوَاللهِ، لَكَأَنَّ عَطْفَتَهُمْ حِينَ سَمِعُوا صَوْتِي عَطْفَةُ الْبَقَرِ عَلَى أَوْلَادِهَا، فَقَالُوا: يَا لَبَّيْكَ، يَا لَبَّيْكَ، قَالَ: فَاقْتَتَلُوا وَالْكُفَّارَ، وَالدَّعْوَةُ فِي الْأَنْصَارِ يَقُولُونَ: يَا مَعْشَرَ الْأَنْصَارِ، يَا مَعْشَرَ الْأَنْصَارِ، قَالَ: ثُمَّ قُصِرَتِ الدَّعْوَةُ عَلَى بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، فَقَالُوا: يَا بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، يَا بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، فَنَظَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى بَغْلَتِهِ كَالْمُتَطَاوِلِ عَلَيْهَا إِلَى قِتَالِهِمْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «هَذَا حِينَ حَمِيَ الْوَطِيسُ» قَالَ: ثُمَّ أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَصَيَاتٍ فَرَمَى بِهِنَّ وُجُوهَ الْكُفَّارِ، ثُمَّ قَالَ: «انْهَزَمُوا وَرَبِّ مُحَمَّدٍ» قَالَ: فَذَهَبْتُ أَنْظُرُ فَإِذَا الْقِتَالُ عَلَى هَيْئَتِهِ فِيمَا أَرَى، قَالَ: فَوَاللهِ، مَا هُوَ إِلَّا أَنْ رَمَاهُمْ بِحَصَيَاتِهِ فَمَا زِلْتُ أَرَى حَدَّهُمْ كَلِيلًا، وَأَمْرَهُمْ مُدْبِرًا


Tamil-3639
Shamila-1775
JawamiulKalim-3330




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.