தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3911

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூ பக்ர்(ரலி) வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூ பக்ர்(ரலி) (இள நரையின் காரணத்தினால் தோற்றத்தினால்) மூத்தவராகவும், (மதீனாவாசிகளிடையே வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதில் அவர்களிடையே) அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (நரை விழாத காரணத்தினால் உருவத்தில்) இளையவராகவும் (வெளியூர் சென்று நீண்ட காலமாகிவிட்டதால் அந்த மக்களிடையே) அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள். (அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற அந்தப் பயணத்தின் போது) அபூ பக்ர்(ரலி) அவர்களை ஒருவர் சந்தித்து, ‘அபூ பக்ரே! உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்?’ என்று கேட்கிறார். அதற்கு, அபூ பக்ர்(ரலி), ‘இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர்’ என்று (நபி – ஸல் அவர்களை எதிரிக்குக் காட்டிக் கொடுத்து விடாமலும், அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரண்டு பொருள்படும்படி) பதிலளிக்கிறார்கள். இதற்கு, (பயணத்தில்) பாதை (காட்டுபவர்)’ என்றே அபூ பக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக் கொள்வார். ஆனால், ‘நன் மார்க்கத்திற்கு (வழிகாட்டுபவர்)’ என்ற பொருளையே அபூ பக்ர் கொண்டிருந்தார்கள்.
அப்போது, அபூ பக்ர்(ரலி) திரும்பிப் பார்த்தார்கள். அங்கு (அவர்களுக்குப் பின்னால்) ஒரு குதிரை வீரர் (சுராகா) அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். உடனே அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! (இதோ!) இந்தக் குதிரை வீரர் நம்மை (நெருங்கி) வந்தடைந்துவிட்டார்’ என்று கூறினார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்துவிட்டு, ‘இறைவா! அவரைக் கீழே விழச் செய்!’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது; பிறகு கனைத்துக் கொண்டே எழுந்து நின்றது. (உடனே சுராகா மனம் திருந்தி), ‘இறைத்தூதர் அவர்களே!’ நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே நின்று கொள். எங்களை பின்தொடர்ந்து வரும் எவரையும்விட்டு விடாதே’ என்று கூறினார்கள். இந்த சுராகா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப் போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கருங்கற்கள் நிறைந்த) ‘ஹர்ரா’ பகுதியில் இறங்கி(த் தங்கி)னார்கள். (அங்கே குபாவில் ஒரு பள்ளி வாசலையும் கட்டச் செய்தார்கள்.) பிறகு, (குபாவிலிருந்து கொண்டு மதீனாவாசிகளான) அன்சாரிகளிடம் ஆளனுப்பினார்கள். உடனே அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமும், அபூ பக்ர்(ரலி) அவர்களிடமும் வந்து, அவர்கள் இருவருக்கும் சலாம் கூறினார்கள். பிறகு, ‘(இப்போது) நீங்கள் இருவரும் அச்சமற்றவர்களாகவும், (ஆணையிடும்) அதிகாரம் படைத்தவர்களாவும் பயணம் செய்யலாம்’ என்று கூறினர். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் (மதீனா நோக்கிப்) பயணமாயினர். அன்சாரிகள் (அவர்களுக்குப் பாதுகாப்பாக) ஆயுதங்களுடன் (அவர்களைச்) சூழ்ந்தபடி சென்றனர். அப்போது மதீனாவில், ‘இறைத்தூதர்(ஸல்) வந்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) வந்துவிட்டார்கள்’ என்று கூறலாயினர். நபி(ஸல்) அவர்கள் சிறிது தூரம் பயணித்த பின்னர் (தம் வாகனத்திலிருந்து) அபூ அய்யூப் (அல் அன்சாரி (ரலி) அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இறங்கினார்கள். (அங்கே) நபியவர்கள் தம் குடும்பத்தாரிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது தம் குடும்பத்தாருக்குச் சொந்தமான பேரீச்சம் தோட்டத்தில் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்த (யூத அறிஞர்) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் இதைக் கேட்டுவிட்டு, குடும்பத்தாருக்காகப் பறித்தவற்றை அவர்களுக்கென எடுத்து வைக்கத் தவறி, அவற்றைத் தம்முடன் கொண்டு வந்துவிட்டார். அங்கே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்த அறிவுரைகளை) அவர்களிடமிருந்து கேட்டுவிட்டு தம் வீட்டாரிடம் திரும்பிச் சென்றார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘எங்கள் குடும்பத்தாரின் வீடுகளில் அருகிலிருப்பது எது?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ அய்யூப் அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இது என் வீடு. இதுதான் என் (வீட்டு) வாசல். (நானே உங்கள் குடும்பத்தாரில் மிக அருகில் உள்ளவன்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சென்று மதிய ஓய்வு கொள்வதற்காக (உங்கள் வீட்டை) எமக்குத் தயார் செய்யுங்கள்’ என்று கூறினார்க்ள. அபூ அய்யூப்(ரலி), ‘உயர்ந்தவனான அல்லாஹ்வின் அருள்வளத்துடன் நீங்கள் இருவரும் எழுங்கள்’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அபூ அய்யூப் அல் அன்சாரீ அவர்களின் இல்லத்திற்கு) வந்தபோது (யூத அறிஞர்) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வந்து, (சில விளக்கங்களைக் கேட்டு உறுதி செய்த பிறகு) ‘தாங்கள் இறைத்தூதர் என்றும், தாங்கள் சத்திய (மார்க்க)த்துடன் வந்துள்ளீர்கள் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன். யூதர்கள் என்னைப் பற்றி, நான் மிகவும் அறிந்தவன் என்றும், அவர்களில் மிகவும் அறிந்தவரின் மகன் என்றும் அறிந்துள்ளனர். நான் முஸ்லிமாகி விட்டேன் என்பதை அவர்கள் அறியும் முன்பாக அவர்களை அழைத்து என்னைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். ஏனெனில், நான் முஸ்லிமாகி விட்டேன் என்பதை அவர்கள் அறிந்தால்’ என்னிடம் இல்லாத (குற்றங்களை முதலிய)வற்றை என்னிடமிருப்பதாகக் கூறுவர்’ என்று கூறினார்கள். (யூதர்களை அழைத்து வரும்படி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். யூதர்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். (உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் ஓரிடத்தில் மறைந்து கொண்டார்கள்.) அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், யூதக் கூட்டத்தினரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்! (இல்லையேல்,) உங்களுக்குக் கேடுதான். எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! நான் உண்மையிலேயே இறைத்தூதர் தாம் என்றும், நான் சத்திய (மார்க்க)த்துடன் உங்களிடம் வந்துள்ளேன் என்றும் நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் முஸ்லிமாகி விடுங்கள்’ என்று கூறினார்கள். யூதர்கள் (ஏற்க மறுத்து), ‘அ(த்தகைய தூதர் ஒரு)வரை நாங்கள் அறியமாட்டோம்’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூற, நபியவர்கள் அதையே மூன்று முறை – கூறினார்கள். (பிறகு,) நபி(ஸல்) அவர்கள், ‘உங்களிடையே அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘அவர் எங்களின் தலைவர்; எங்களுடைய தலைவரின் மகன்; மேலும் எங்களில் மிகப் பெரிய அறிஞர்; மிகப் பெரிய அறிஞரின் மகன்’ என்று கூறினர். ‘அவர் முஸ்லிமாகிவிட்டால்… (என்ன செய்வீர்கள்) கூறுங்கள்’ என்றார்கள். அவர்கள், ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாக மாட்டார்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் முஸ்லிமாகிவிட்டால் (என்ன செய்வீர்கள்) கூறுங்கள்’ என்று (மீண்டும்) கேட்க, அவர்கள் (முன்பு போன்றே), ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாகிவிட்டால்.. கூறுங்கள்’ என்று (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் கேட்க, அவர்கள், ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாக மாட்டார்’ என்று கூறினர்.நபி(ஸல்) அவர்கள், ‘இப்னு சலாமே! இவர்களிடம் வாருங்கள்’ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, ‘யூதர்கள் கூட்டமே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! இவர்கள் இறைத்தூதர் தாம் என்பதையும் இவர்கள் சத்திய (மார்க்க)த்துடன் வந்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் நன்கறிவீர்கள்’ என்று கூறினார்கள். உடனே யூதர்கள், ‘நீ பொய் சொன்னாய்’ என்று கூறினார்கள். உடனே யூதர்களை நபி(ஸல்) அவர்கள் (தம்மிடத்திலிருந்து) வெளியேறச் செய்தார்கள்.
Book :63

(புகாரி: 3911)

حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

أَقْبَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المَدِينَةِ وَهُوَ مُرْدِفٌ أَبَا بَكْرٍ، وَأَبُو بَكْرٍ شَيْخٌ يُعْرَفُ، وَنَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَابٌّ لاَ يُعْرَفُ، قَالَ: فَيَلْقَى الرَّجُلُ أَبَا بَكْرٍ فَيَقُولُ يَا أَبَا بَكْرٍ مَنْ هَذَا الرَّجُلُ الَّذِي بَيْنَ يَدَيْكَ؟ فَيَقُولُ: هَذَا الرَّجُلُ يَهْدِينِي السَّبِيلَ، قَالَ: فَيَحْسِبُ الحَاسِبُ أَنَّهُ إِنَّمَا يَعْنِي الطَّرِيقَ، وَإِنَّمَا يَعْنِي سَبِيلَ الخَيْرِ، فَالْتَفَتَ أَبُو بَكْرٍ فَإِذَا هُوَ بِفَارِسٍ قَدْ لَحِقَهُمْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا فَارِسٌ قَدْ لَحِقَ بِنَا، فَالْتَفَتَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اللَّهُمَّ اصْرَعْهُ». فَصَرَعَهُ الفَرَسُ، ثُمَّ قَامَتْ تُحَمْحِمُ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، مُرْنِي بِمَا شِئْتَ، قَالَ: «فَقِفْ مَكَانَكَ، لاَ تَتْرُكَنَّ أَحَدًا يَلْحَقُ بِنَا». قَالَ: ” فَكَانَ أَوَّلَ النَّهَارِ جَاهِدًا عَلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ آخِرَ النَّهَارِ مَسْلَحَةً لَهُ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَانِبَ الحَرَّةِ، ثُمَّ بَعَثَ إِلَى الأَنْصَارِ فَجَاءُوا إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ فَسَلَّمُوا عَلَيْهِمَا، وَقَالُوا: ارْكَبَا آمِنَيْنِ مُطَاعَيْنِ. فَرَكِبَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ، وَحَفُّوا دُونَهُمَا بِالسِّلاَحِ، فَقِيلَ فِي المَدِينَةِ: جَاءَ نَبِيُّ اللَّهِ، جَاءَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَشْرَفُوا يَنْظُرُونَ وَيَقُولُونَ: جَاءَ نَبِيُّ اللَّهِ، جَاءَ نَبِيُّ اللَّهِ، فَأَقْبَلَ يَسِيرُ حَتَّى نَزَلَ جَانِبَ دَارِ أَبِي أَيُّوبَ، فَإِنَّهُ لَيُحَدِّثُ أَهْلَهُ إِذْ سَمِعَ بِهِ عَبْدُ اللَّهِ  بْنُ سَلاَمٍ، وَهُوَ فِي نَخْلٍ لِأَهْلِهِ، يَخْتَرِفُ لَهُمْ، فَعَجِلَ أَنْ يَضَعَ الَّذِي يَخْتَرِفُ لَهُمْ فِيهَا، فَجَاءَ وَهِيَ مَعَهُ، فَسَمِعَ مِنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعَ إِلَى أَهْلِهِ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّ بُيُوتِ أَهْلِنَا أَقْرَبُ». فَقَالَ أَبُو أَيُّوبَ: أَنَا يَا نَبِيَّ اللَّهِ، هَذِهِ دَارِي وَهَذَا بَابِي، قَالَ: «فَانْطَلِقْ فَهَيِّئْ لَنَا مَقِيلًا»، قَالَ: قُومَا عَلَى بَرَكَةِ اللَّهِ، فَلَمَّا جَاءَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، وَأَنَّكَ جِئْتَ بِحَقٍّ، وَقَدْ عَلِمَتْ يَهُودُ أَنِّي سَيِّدُهُمْ وَابْنُ سَيِّدِهِمْ، وَأَعْلَمُهُمْ وَابْنُ أَعْلَمِهِمْ، فَادْعُهُمْ فَاسْأَلْهُمْ عَنِّي قَبْلَ أَنْ يَعْلَمُوا أَنِّي قَدْ أَسْلَمْتُ، فَإِنَّهُمْ إِنْ يَعْلَمُوا أَنِّي قَدْ أَسْلَمْتُ قَالُوا فِيَّ مَا لَيْسَ فِيَّ. فَأَرْسَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقْبَلُوا فَدَخَلُوا عَلَيْهِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ اليَهُودِ، وَيْلَكُمْ، اتَّقُوا اللَّهَ، فَوَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلَّا هُوَ، إِنَّكُمْ لَتَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ حَقًّا، وَأَنِّي جِئْتُكُمْ بِحَقٍّ، فَأَسْلِمُوا»، قَالُوا: مَا نَعْلَمُهُ، قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَهَا ثَلاَثَ مِرَارٍ، قَالَ: «فَأَيُّ رَجُلٍ فِيكُمْ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ؟» قَالُوا: ذَاكَ سَيِّدُنَا وَابْنُ سَيِّدِنَا، وَأَعْلَمُنَا وَابْنُ أَعْلَمِنَا، قَالَ: «أَفَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ؟»، قَالُوا: حَاشَى لِلَّهِ مَا كَانَ لِيُسْلِمَ، قَالَ: «أَفَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ؟» قَالُوا: حَاشَى لِلَّهِ مَا كَانَ لِيُسْلِمَ، قَالَ: «أَفَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ؟»، قَالُوا: حَاشَى لِلَّهِ مَا كَانَ لِيُسْلِمَ، قَالَ: «يَا ابْنَ سَلاَمٍ اخْرُجْ عَلَيْهِمْ»، فَخَرَجَ فَقَالَ: يَا مَعْشَرَ اليَهُودِ اتَّقُوا اللَّهَ، فَوَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلَّا هُوَ، إِنَّكُمْ لَتَعْلَمُونَ أَنَّهُ رَسُولُ اللَّهِ، وَأَنَّهُ جَاءَ بِحَقٍّ، فَقَالُوا: كَذَبْتَ، فَأَخْرَجَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.