தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1921

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ (ரலி) மற்றும் பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அல்கைர் அத்தாயீ (ரலி) ஆகியோரே அந்நால்வரும்.

இதைக் கண்ட குறைஷி (முஸ்லிம்)கள் கோபமடைந்தனர். “நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்; எங்களை விட்டுவிடுகிறீர்களே!” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(புதிதாக இஸ்லாத்தைத் தழுவியுள்ள) அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்” என்று கூறினார்கள்.

அப்போது அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் தடித்திருந்த, கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்திருந்த, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் வந்து, “முஹம்மதே! அல்லாஹ்விற்கு அஞ்சுவீராக!” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானே (அல்லாஹ்விற்கு) மாறுசெய்தால் வேறெவர்தாம் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவ(ர்களைப் படைத்த இறைவ)ன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த மக்களில் ஒருவர் அவரைக் கொல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். (அனுமதி கேட்டவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்றே கருதப்படுகிறது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(வ்வாறு என்னிடம் பேசிய அ)ந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் “ஆத்” கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.

Book : 12

(முஸ்லிம்: 1921)

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ

بَعَثَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ، وَهُوَ بِالْيَمَنِ بِذَهَبَةٍ فِي تُرْبَتِهَا، إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَسَمَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ: الْأَقْرَعُ بْنُ حَابِسٍ الْحَنْظَلِيُّ، وَعُيَيْنَةُ بْنُ بَدْرٍ الْفَزَارِيُّ وَعَلْقَمَةُ بْنُ عُلَاثَةَ الْعَامِرِيُّ ثُمَّ أَحَدُ بَنِي كِلَابٍ، وَزَيْدُ الْخَيْرِ الطَّائِيُّ، ثُمَّ أَحَدُ بَنِي نَبْهَانَ، قَالَ: فَغَضِبَتْ قُرَيْشٌ، فَقَالُوا: أَتُعْطِي صَنَادِيدَ نَجْدٍ وَتَدَعُنَا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي إِنَّمَا فَعَلْتُ ذَلِكَ لِأَتَأَلَّفَهُمْ» فَجَاءَ رَجُلٌ كَثُّ اللِّحْيَةِ، مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، غَائِرُ الْعَيْنَيْنِ، نَاتِئُ الْجَبِينِ، مَحْلُوقُ الرَّأْسِ، فَقَالَ: اتَّقِ اللهَ، يَا مُحَمَّدُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ يُطِعِ اللهَ إِنْ عَصَيْتُهُ، أَيَأْمَنُنِي عَلَى أَهْلِ الْأَرْضِ وَلَا تَأْمَنُونِي؟» قَالَ: ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ، فَاسْتَأْذَنَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فِي قَتْلِهِ – يُرَوْنَ أَنَّهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ – فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَقْتُلُونَ، أَهْلَ الْإِسْلَامِ، وَيَدَعُونَ أَهْلَ الْأَوْثَانِ، يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، لَئِنْ أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ»


Tamil-1921
Shamila-1064
JawamiulKalim-1769




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.