தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2323

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் “இஹ்ராம்” கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவை நோக்கி) வந்தோம். ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராவிற்காக (“இஹ்ராம்” கட்டியவர்களாக) வந்தார்கள். நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) “சரிஃப்” எனுமிடத்திற்கு வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் இறையில்லம் கஅபா,ஸஃபா மற்றும் மர்வா ஆகியவற்றைச் சுற்றினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், எங்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.

அப்போது நாங்கள், “(இஹ்ராமிலிருந்து விடுபட்டால் எங்களுக்கு) எதுவெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அனைத்துமே அனுமதிக்கப் பெற்றுள்ளன” என்றார்கள். ஆகவே, நாங்கள் (எங்கள்) மனைவி யருடன் தாம்பத்திய உறவு கொண்டோம். நறுமணம் பூசிக்கொண்டோம். (தைக்கப்பெற்ற) எங்கள் ஆடைகளை அணிந்து கொண்டோம். அன்றைய தினத்திற்கும் அரஃபாவுக்குமிடையே நான்கு இரவுகளே இருந்தன. பின்னர் நாங்கள் “தர்வியா” (துல்ஹஜ் எட்டாம்)நாளில் ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டி, “தல்பியா” சொன்னோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது, “உனது பிரச்சினை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “எனது பிரச்சினை என்னவென்றால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருக்க, நான் மட்டும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவுமில்லை. இப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகப் போய்க்கொண்டிருக்கின்றனர்” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(ந்த மாதவிடாயான)து, பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கியதாகும். ஆகவே, நீ குளித்துவிட்டுப் பின்னர் ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டி “தல்பியா” சொல்லிக்கொள்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு, தங்க வேண்டிய (புனித) இடங்களில் தங்கினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மை யடைந்ததும் கஅபாவையும், ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ உனது ஹஜ்ஜிலிருந்தும் உம்ராவிலிருந்தும் விடுபட்டு விட்டாய்” என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வராமலேயே ஹஜ் செய்து முடித்து விட்டேனே எனக் கவலைப்படுகிறேன்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சகோதரரிடம்) “அப்துர் ரஹ்மானே! நீ இவரை அழைத்துச் சென்று, “தன்ஈமி”லிருந்து உம்ராச் செய்யவைப்பாயாக!” என்றார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) “முஹஸ்ஸபி”ல் தங்கியிருந்த இரவில் இது நடந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் “நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள்…” என்பதிலிருந்தே ஹதீஸ் தொடங்குகிறது.

Book : 15

(முஸ்லிம்: 2323)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، جَمِيعًا عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، – قَالَ قُتَيْبَةُ: حَدَّثَنَا، لَيْثٌ – عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّهُ قَالَ

أَقْبَلْنَا مُهِلِّينَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَجٍّ مُفْرَدٍ، وَأَقْبَلَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا، بِعُمْرَةٍ حَتَّى إِذَا كُنَّا بِسَرِفَ عَرَكَتْ، حَتَّى إِذَا قَدِمْنَا طُفْنَا بِالْكَعْبَةِ وَالصَّفَا وَالْمَرْوَةِ، فَأَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَحِلَّ مِنَّا مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ، قَالَ فَقُلْنَا: حِلُّ مَاذَا؟ قَالَ: «الْحِلُّ كُلُّهُ» فَوَاقَعْنَا النِّسَاءَ، وَتَطَيَّبْنَا بِالطِّيبِ، وَلَبِسْنَا ثِيَابَنَا، وَلَيْسَ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلَّا أَرْبَعُ لَيَالٍ، ثُمَّ أَهْلَلْنَا يَوْمَ التَّرْوِيَةِ، ثُمَّ دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، فَوَجَدَهَا تَبْكِي، فَقَالَ: «مَا شَأْنُكِ؟» قَالَتْ: شَأْنِي أَنِّي قَدْ حِضْتُ، وَقَدْ حَلَّ النَّاسُ، وَلَمْ أَحْلِلْ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ وَالنَّاسُ يَذْهَبُونَ إِلَى الْحَجِّ الْآنَ، فَقَالَ: «إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاغْتَسِلِي، ثُمَّ أَهِلِّي بِالْحَجِّ» فَفَعَلَتْ وَوَقَفَتِ الْمَوَاقِفَ، حَتَّى إِذَا طَهَرَتْ طَافَتْ بِالْكَعْبَةِ وَالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ قَالَ: «قَدْ حَلَلْتِ مِنْ حَجِّكِ وَعُمْرَتِكِ جَمِيعًا» فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أَجِدُ فِي نَفْسِي أَنِّي لَمْ أَطُفْ بِالْبَيْتِ حَتَّى حَجَجْتُ، قَالَ: «فَاذْهَبْ بِهَا، يَا عَبْدَ الرَّحْمَنِ، فَأَعْمِرْهَا مِنَ التَّنْعِيمِ» وَذَلِكَ لَيْلَةَ الْحَصْبَةِ

– وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ – قَالَ ابْنُ حَاتِمٍ: حَدَّثَنَا، وَقَالَ عَبْدٌ: – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا، يَقُولُ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، وَهِيَ تَبْكِي، فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ إِلَى آخِرِهِ، وَلَمْ يَذْكُرْ مَا قَبْلَ هَذَا مِنْ حَدِيثِ اللَّيْثِ.


Tamil-2323
Shamila-1213
JawamiulKalim-2134




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.