தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2377

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

(ஹஜ்ஜின்போது) கஅபாவைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே “சயீ” செய்த பின் (ஹஜ் முடியும்வரை) அந்த இஹ்ராமிலேயே நீடிப்பது, (அதாவது) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பது அவசியமாகும்.

 முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இராக்வாசிகளில் ஒருவர் என்னிடம், “நீங்கள் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் “ஒருவர் ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்”கட்டி, (மக்காவிற்கு வந்ததும்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார். இந்நிலையில் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாமா, அல்லது கூடாதா?” என்று கேளுங்கள். உர்வா (ரஹ்) அவர்கள் “இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது” என்று பதிலளித்தால் “விடுபடலாம் என ஒரு மனிதர் கூறுகிறாரே?” என்று கேளுங்கள்” என்றார்.

அவ்வாறே நான் உர்வா (ரஹ்) அவர்களிடம் (சென்று) கேட்டபோது அவர்கள், “ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டியவர் ஹஜ்ஜை முடிக்காமல் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது” என்று விடையளித்தார்கள். நான் “அப்படியானால், விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “அவர் சொன்னது தவறு” என்றார்கள்.

பின்னர் அந்த மனிதர் என் எதிரே வந்து அ(வர் கூறியனுப்பிய)து பற்றி என்னிடம் கேட்டார். அ(ப்போது உர்வா (ரஹ்) அவர்கள் கூறிய)தை நான் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அந்த மனிதர் என்னிடம், “உர்வா (ரஹ்) அவர்களிடம் “அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக ஒரு மனிதர் தெரிவித்து வந்தாரே? அஸ்மா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் நிலை என்ன? அவர்களும் அவ்வாறு செய்துள்ளனரே?” என்று நீங்கள் கேளுங்கள்” என்றார்.

அவ்வாறே நான் (மீண்டும்) உர்வா (ரஹ்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள் “யார் அவர்?” என்று கேட்டார்கள். நான் “எனக்குத் தெரியாது” என்றேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “அவருக்கு என்ன நேர்ந்தது? என்னிடமே வந்து நேரடியாகக் கேட்க மறுக்கிறாரே? அவர் (மார்க்க விஷயங்களில் பிடிவாதம் காட்டக்கூடிய) ஓர் இராக்வாசி என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். நான் “எனக்குத் தெரியாது” என்று (மீண்டும்) சொன்னேன்.

உர்வா (ரஹ்) அவர்கள், “அவர் பொய்யுரைத்துவிட்டார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள்.

பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, அ(பூபக்ர் (ரலி) அவர்கள் செய்த)தைப் போன்றே செய்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றி வருவதையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை.

பின்னர் முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத் தான் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் நடக்க வில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்சாரிகளும் அவ்வாறு செய்வதையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை.

பின்னர் அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்களையே நான் கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னு உமர் (ரலி) அவர்களே இருக்கிறார்கள். அவர்களிடமே மக்கள் கேட்க வேண்டியதுதானே! முன்னோர்களில் எவரும் தம் பாதங்களை (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்) இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா-ரலி), என் சிறிய தாயார் (ஆயிஷா-ரலி) ஆகியோர் (மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.

என் தாயார் (அஸ்மா-ரலி) அவர்கள் என்னிடம், “நானும் என் சகோதரி (ஆயிஷா-ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்ன மனிதரும் உம்ராவிற்குச் சென்றபோது ஹஜருல் அஸ்வதைத் தொட்டதும் (அதாவது தவாஃபும் “சயீ”யும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்” என்று தெரிவித்தார்கள். (எனவே இராக்கைச் சேர்ந்த) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2377)

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ

أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالَ لَهُ: سَلْ لِي عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ عَنْ رَجُلٍ يُهِلُّ بِالْحَجِّ، فَإِذَا طَافَ بِالْبَيْتِ أَيَحِلُّ أَمْ لَا؟ فَإِنْ قَالَ لَكَ: لَا يَحِلُّ، فَقُلْ لَهُ: إِنَّ رَجُلًا يَقُولُ ذَلِكَ، قَالَ فَسَأَلْتُهُ فَقَالَ: لَا يَحِلُّ مَنْ أَهَلَّ بِالْحَجِّ إِلَّا بِالْحَجِّ، قُلْتُ: فَإِنَّ رَجُلًا كَانَ يَقُولُ ذَلِكَ، قَالَ: بِئْسَ مَا قَالَ، فَتَصَدَّانِي الرَّجُلُ فَسَأَلَنِي فَحَدَّثْتُهُ، فَقَالَ: فَقُلْ لَهُ: فَإِنَّ رَجُلًا كَانَ يُخْبِرُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ فَعَلَ ذَلِكَ، وَمَا شَأْنُ أَسْمَاءَ وَالزُّبَيْرِ قَدْ فَعَلَا ذَلِكَ، قَالَ: فَجِئْتُهُ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ، فَقَالَ: مَنْ هَذَا؟ فَقُلْتُ: لَا أَدْرِي، قَالَ: فَمَا بَالُهُ لَا يَأْتِينِي بِنَفْسِهِ يَسْأَلُنِي؟ أَظُنُّهُ عِرَاقِيًّا، قُلْتُ: لَا أَدْرِي، قَالَ: فَإِنَّهُ قَدْ كَذَبَ، قَدْ حَجَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: «أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ مَكَّةَ أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ بِالْبَيْتِ، ثُمَّ حَجَّ» أَبُو بَكْرٍ فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ بِالْبَيْتِ، ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ، ثُمَّ عُمَرُ مِثْلُ ذَلِكَ، ثُمَّ حَجَّ عُثْمَانُ فَرَأَيْتُهُ أَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ بِالْبَيْتِ، ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ، ثُمَّ مُعَاوِيَةُ وَعَبْدُ اللهِ بْنُ عُمَرَ، ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ بِالْبَيْتِ، ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ، ثُمَّ رَأَيْتُ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارَ يَفْعَلُونَ ذَلِكَ، ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ، ثُمَّ آخِرُ مَنْ رَأَيْتُ فَعَلَ ذَلِكَ ابْنُ عُمَرَ، ثُمَّ لَمْ يَنْقُضْهَا بِعُمْرَةٍ، وَهَذَا ابْنُ عُمَرَ عِنْدَهُمْ أَفَلَا يَسْأَلُونَهُ؟ وَلَا أَحَدٌ مِمَّنْ مَضَى مَا كَانُوا يَبْدَءُونَ بِشَيْءٍ حِينَ يَضَعُونَ أَقْدَامَهُمْ أَوَّلَ مِنَ الطَّوَافِ بِالْبَيْتِ، ثُمَّ لَا يَحِلُّونَ، وَقَدْ رَأَيْتُ أُمِّي وَخَالَتِي حِينَ تَقْدَمَانِ لَا تَبْدَآنِ بِشَيْءٍ أَوَّلَ مِنَ الْبَيْتِ تَطُوفَانِ بِهِ، ثُمَّ لَا تَحِلَّانِ، وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَقْبَلَتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلَانٌ وَفُلَانٌ بِعُمْرَةٍ قَطُّ، فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا وَقَدْ كَذَبَ فِيمَا ذَكَرَ مِنْ ذَلِكَ


Tamil-2377
Shamila-1235
JawamiulKalim-2181




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.