தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3440

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் கைபர் பகுதியை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த ஒரு பேரீச்சந்தோட்டத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். யூதர்கள்மீது (அவர்கள்தாம் கொன்றிருப்பார்கள் என) சந்தேகம் ஏற்பட்டது.

ஆகவே, அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அவருடைய தந்தையின் சகோதரரின் புதல்வர்களான ஹுவய்யிஸா (ரலி) மற்றும் முஹய்யிஸா (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தம் சகோதரர் (கொலை) தொடர்பாக அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) பேசினார்கள். அம்மூவரில் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “பெரியவர்களைப் பேசவிடு” அல்லது “வயதில் பெரியவர் முதலில் பேசட்டும்” என்று கூறினார்கள்.

அவர்கள் இருவரும் (கொல்லப்பட்ட) தம் உறவினர் தொடர்பாகப் பேசியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஐம்பது பேர் யூதர்களில் (கொலை செய்த) மனிதருக்கெதிராகச் சத்தியம் செய்ய வேண்டும். அதையடுத்துக் கொலையாளியின் கழுத்தில் கயிற்றை மாட்டி அவன் ஒப்படைக்கப்படுவான்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், “சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத நாங்கள் எப்படிச் சத்தியம் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், யூதர்களில் ஐம்பது பேர் (நாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை எனச்) சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிக்கட்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நிராகரிக்கும் சமுதாயத்தார் ஆயிற்றே? (அவர்களுடைய சத்தியங்களை நாம் எப்படி ஏற்க முடியும்?)” என்று கேட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பின்னர் ஒரு நாள் நான் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களது ஒட்டகத் தொழுவத்திற்குச் சென்றேன். (நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத் தொகையாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்று தனது காலால் என்னை உதைத்துவிட்டது.

அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “இவ்வாறு(தான் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.) அல்லது இதைப் போன்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்” என இடம்பெற்றுள்ளது. “ஒட்டகம் என்னை உதைத்து விட்டது” எனும் குறிப்பு அதில் இல்லை.

– மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 28

(முஸ்லிம்: 3440)

وحَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، وَرَافِعِ بْنِ خَدِيجٍ

أَنَّ مُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ، وَعَبْدَ اللهِ بْنَ سَهْلٍ، انْطَلَقَا قِبَلَ خَيْبَرَ، فَتَفَرَّقَا فِي النَّخْلِ، فَقُتِلَ عَبْدُ اللهِ بْنُ سَهْلٍ، فَاتَّهَمُوا الْيَهُودَ، فَجَاءَ أَخُوهُ عَبْدُ الرَّحْمَنِ، وَابْنَا عَمِّهِ حُوَيِّصَةُ، وَمُحَيِّصَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَكَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ فِي أَمْرِ أَخِيهِ، وَهُوَ أَصْغَرُ مِنْهُمْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَبِّرِ الْكُبْرَ»، أَوْ قَالَ: «لِيَبْدَأِ الْأَكْبَرُ»، فَتَكَلَّمَا فِي أَمْرِ صَاحِبِهِمَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقْسِمُ خَمْسُونَ مِنْكُمْ عَلَى رَجُلٍ مِنْهُمْ، فَيُدْفَعُ بِرُمَّتِهِ»، قَالُوا: أَمْرٌ لَمْ نَشْهَدْهُ، كَيْفَ نَحْلِفُ؟ قَالَ: «فَتُبْرِئُكُمْ يَهُودُ بِأَيْمَانِ خَمْسِينَ مِنْهُمْ»، قَالُوا: يَا رَسُولَ اللهِ، قَوْمٌ كُفَّارٌ؟ قَالَ: فَوَدَاهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ قِبَلِهِ، قَالَ سَهْلٌ: فَدَخَلْتُ مِرْبَدًا لَهُمْ يَوْمًا فَرَكَضَتْنِي نَاقَةٌ مِنْ تِلْكَ الْإِبِلِ رَكْضَةً بِرِجْلِهَا، قَالَ حَمَّادٌ: هَذَا أَوْ نَحْوَهُ

– وحَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ، وَقَالَ فِي حَدِيثِهِ: فَعَقَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ، وَلَمْ يَقُلْ فِي حَدِيثِهِ: فَرَكَضَتْنِي نَاقَةٌ،

– حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ، جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، بِنَحْوِ حَدِيثِهِمْ


Tamil-3440
Shamila-1669
JawamiulKalim-3166




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.