தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3682

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42

யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.

 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்” என்று விடையளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பேசு” என அனுமதியளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, “இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்” என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

அதற்கு கஅப், “இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?” என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நீ என்ன விரும்புகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு கஅப், “உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)” என்று சொன்னார்கள்.

“(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது “இவன் இரண்டு “வஸ்க்” பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்” என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்” என்று கூறினார்கள். “அப்படியானால் சரி” என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.

பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.

அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் “கஅபின் மனைவி அவனிடம், “நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது” என்று கூறினாள்.

அதற்கு கஅப் “அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்” என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), “கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்” என்று கூறினார்கள்.

கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், “உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்” என்று கூறினர். அதற்கு கஅப் “ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்” என்று கூறினான்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு கஅப் “ஆம்; நுகர்ந்து கொள்” என அனுமதியளித்தான்.

அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, “மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?” என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது “பிடியுங்கள்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 32

(முஸ்லிம்: 3682)

42 – بَابُ قَتْلِ كَعْبِ بْنِ الْأَشْرَفِ طَاغُوتِ الْيَهُودِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَعَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ الزُّهْرِيُّ، كِلَاهُمَا، عَنِ ابْنِ عُيَيْنَةَ، وَاللَّفْظُ لِلزُّهْرِيِّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ لِكَعْبِ بْنِ الْأَشْرَفِ؟ فَإِنَّهُ قَدْ آذَى اللهَ وَرَسُولَهُ»، فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ: يَا رَسُولَ اللهِ، أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: ائْذَنْ لِي، فَلْأَقُلْ، قَالَ: «قُلْ»، فَأَتَاهُ، فَقَالَ لَهُ: وَذَكَرَ مَا بَيْنَهُمَا، وَقَالَ: إِنَّ هَذَا الرَّجُلَ قَدْ أَرَادَ صَدَقَةً، وَقَدْ عَنَّانَا، فَلَمَّا سَمِعَهُ قَالَ: وَأَيْضًا وَاللهِ، لَتَمَلُّنَّهُ، قَالَ: إِنَّا قَدِ اتَّبَعْنَاهُ الْآنَ، وَنَكْرَهُ أَنْ نَدَعَهُ حَتَّى نَنْظُرَ إِلَى أَيِّ شَيْءٍ يَصِيرُ أَمْرُهُ، قَالَ: وَقَدْ أَرَدْتُ أَنْ تُسْلِفَنِي سَلَفًا، قَالَ: فَمَا تَرْهَنُنِي؟ قَالَ: مَا تُرِيدُ؟ قَالَ: تَرْهَنُنِي نِسَاءَكُمْ، قَالَ: أَنْتَ أَجْمَلُ الْعَرَبِ، أَنَرْهَنُكَ نِسَاءَنَا؟ قَالَ لَهُ: تَرْهَنُونِي أَوْلَادَكُمْ، قَالَ: يُسَبُّ ابْنُ أَحَدِنَا، فَيُقَالُ: رُهِنَ فِي وَسْقَيْنِ مِنْ تَمْرٍ، وَلَكِنْ نَرْهَنُكَ اللَّأْمَةَ – يَعْنِي السِّلَاحَ -، قَالَ: فَنَعَمْ، وَوَاعَدَهُ أَنْ يَأْتِيَهُ بِالْحَارِثِ، وَأَبِي عَبْسِ بْنِ جَبْرٍ، وَعَبَّادِ بْنِ بِشْرٍ، قَالَ: فَجَاءُوا فَدَعَوْهُ لَيْلًا فَنَزَلَ إِلَيْهِمْ، قَالَ سُفْيَانُ: قَالَ غَيْرُ عَمْرٍو: قَالَتْ لَهُ امْرَأَتُهُ: إِنِّي لَأَسْمَعُ صَوْتًا كَأَنَّهُ صَوْتُ دَمٍ، قَالَ: إِنَّمَا هَذَا مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ، وَرَضِيعُهُ، وَأَبُو نَائِلَةَ، إِنَّ الْكَرِيمَ لَوْ دُعِيَ إِلَى طَعْنَةٍ لَيْلًا لَأَجَابَ، قَالَ مُحَمَّدٌ: إِنِّي إِذَا جَاءَ، فَسَوْفَ أَمُدُّ يَدِي إِلَى رَأْسِهِ، فَإِذَا اسْتَمْكَنْتُ مِنْهُ فَدُونَكُمْ، قَالَ: فَلَمَّا نَزَلَ نَزَلَ وَهُوَ مُتَوَشِّحٌ، فَقَالُوا: نَجِدُ مِنْكَ رِيحَ الطِّيبِ، قَالَ: نَعَمْ تَحْتِي فُلَانَةُ هِيَ أَعْطَرُ نِسَاءِ الْعَرَبِ، قَالَ: فَتَأْذَنُ لِي أَنْ أَشُمَّ مِنْهُ، قَالَ: نَعَمْ فَشُمَّ، فَتَنَاوَلَ فَشَمَّ، ثُمَّ قَالَ: أَتَأْذَنُ لِي أَنْ أَعُودَ، قَالَ: فَاسْتَمْكَنَ مِنْ رَأْسِهِ، ثُمَّ قَالَ: دُونَكُمْ، قَالَ: فَقَتَلُوهُ


Tamil-3682
Shamila-1801
JawamiulKalim-3365




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.