தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4778

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களை விமர்சிக்குமாறு) எனக்கு உத்தரவிட்டார்கள். “நீர் அபுத்துராப் (அலீ) அவர்களை ஏச மறுப்பதற்கு என்ன காரணம்?” என்று முஆவியா (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்ன மூன்று விஷயங்களை நான் (இன்றும்) நினைத்துப்பார்க்கிறேன். எனவே, அலீ (ரலி) அவர்களை நான் ஒருபோதும் ஏசமாட்டேன். அந்த மூன்றில் ஒன்று என்னிடம் இருப்பதுகூட, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகம் எனக்குக் கிடைப்பதைவிட மிகவும் உவப்பானதாகும். (அந்த மூன்று விஷயங்கள் வருமாறு:)

1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் எனும்) ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்ற போது, (மதீனாவில்) அலீ (ரலி) அவர்களைத் தம் பிரதிநிதியாக விட்டுச்சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பெண்களையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைத்தூதர்) மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்,) எனக்குப்பின் நபித்துவம் இல்லை” என்று கூறினார்கள்.

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், “நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்” என்று கூறினார்கள். (அந்த மனிதர் நாமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில்) நாங்கள் எங்கள் தலையை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால்) உயர்த்திக்காட்டினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அலீ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அப்போது அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. அவர்களது கண்ணில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்து (கண்வலியைக் குணப்படுத்திவிட்டு), கொடியை அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்களுக்கு அந்தப் போரில் அல்லாஹ் வெற்றியளித்தான்.

3. “வாருங்கள். எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் அழைப்போம்…” (3:61) எனும் இந்த வசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, “இறைவா! இவர்கள்தான் என் குடும்பத்தார்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4778)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالَا: حَدَّثَنَا حَاتِمٌ وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ – عَنْ بُكَيْرِ بْنِ مِسْمَارٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ

أَمَرَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ سَعْدًا فَقَالَ: مَا مَنَعَكَ أَنْ تَسُبَّ أَبَا التُّرَابِ؟ فَقَالَ: أَمَّا مَا ذَكَرْتُ ثَلَاثًا قَالَهُنَّ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَنْ أَسُبَّهُ، لَأَنْ تَكُونَ لِي وَاحِدَةٌ مِنْهُنَّ أَحَبُّ إِلَيَّ مِنْ حُمْرِ النَّعَمِ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَهُ، خَلَّفَهُ فِي بَعْضِ مَغَازِيهِ، فَقَالَ لَهُ عَلِيٌّ: يَا رَسُولَ اللهِ خَلَّفْتَنِي مَعَ النِّسَاءِ وَالصِّبْيَانِ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى؟ إِلَّا أَنَّهُ لَا نُبُوَّةَ بَعْدِي» وَسَمِعْتُهُ يَقُولُ يَوْمَ خَيْبَرَ «لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يُحِبُّ اللهَ وَرَسُولَهُ، وَيُحِبُّهُ اللهُ وَرَسُولُهُ» قَالَ فَتَطَاوَلْنَا لَهَا فَقَالَ: «ادْعُوا لِي عَلِيًّا» فَأُتِيَ بِهِ أَرْمَدَ، فَبَصَقَ فِي عَيْنِهِ وَدَفَعَ الرَّايَةَ إِلَيْهِ، فَفَتَحَ اللهُ عَلَيْهِ، وَلَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ} [آل عمران: 61] دَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا وَفَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَقَالَ: «اللهُمَّ هَؤُلَاءِ أَهْلِي»

– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ سَعْدٍ، عَنْ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ لِعَلِيٍّ «أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى؟»


Tamil-4778
Shamila-2404
JawamiulKalim-4427,
4428




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.