தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6972

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

கணவனிடமும் சக்களத்திகளிடமும் ஒரு பெண் தந்திரம் செய்வது விரும்பத் தகுந்தது அல்ல என்பதும், இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறை வசனமும்.

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பு தேனும் விருப்பமானவையாக இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒரு நாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல்பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்’ என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, ‘நபி (ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, இறைத்தூதர் அவர்களே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். எனவே, ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவேதான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனுமில்லையோ அத்தகைய (இறை)வன் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் இருந்தபோது உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். ‘அப்படியானால், (இது என்ன வாடை?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்’ என்றார்கள். நான், ‘அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)’ என்று சொன்னேன்.

(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், ‘இறைத்தூதர் அவர்களே! அருந்துவதற்கு தங்களுக்குச் சிறிது தேன் தரட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அது எனக்குத் தேவையில்லை’ என்று கூறினார்கள்.

(இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள், ‘அல்லாஹ் தூயவன்! நபி (ஸல்) அவர்களை அதை அருந்தவிடாமல் நாம் தடுத்து விட்டோமே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், ‘சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது)’ என்று சொல்வேன்.26

Book : 90

(புகாரி: 6972)

بَابُ مَا يُكْرَهُ مِنَ احْتِيَالِ المَرْأَةِ مَعَ الزَّوْجِ وَالضَّرَائِرِ، وَمَا نَزَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الحَلْوَاءَ، وَيُحِبُّ العَسَلَ، وَكَانَ إِذَا صَلَّى العَصْرَ أَجَازَ عَلَى نِسَائِهِ فَيَدْنُو مِنْهُنَّ، فَدَخَلَ عَلَى حَفْصَةَ، فَاحْتَبَسَ عِنْدَهَا أَكْثَرَ مِمَّا كَانَ يَحْتَبِسُ، فَسَأَلْتُ عَنْ ذَلِكَ، فَقَالَ لِي: أَهْدَتْ لَهَا امْرَأَةٌ مِنْ قَوْمِهَا عُكَّةَ عَسَلٍ، فَسَقَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ شَرْبَةً، فَقُلْتُ: أَمَا وَاللَّهِ لَنَحْتَالَنَّ لَهُ، فَذَكَرْتُ ذَلِكَ لِسَوْدَةَ، قُلْتُ: إِذَا دَخَلَ عَلَيْكِ فَإِنَّهُ سَيَدْنُو مِنْكِ، فَقُولِي لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَكَلْتَ مَغَافِيرَ، فَإِنَّهُ سَيَقُولُ: لاَ، فَقُولِي لَهُ: مَا هَذِهِ الرِّيحُ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْتَدُّ عَلَيْهِ أَنْ يُوجَدَ مِنْهُ الرِّيحُ، فَإِنَّهُ سَيَقُولُ: سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ، فَقُولِي لَهُ: جَرَسَتْ نَحْلُهُ العُرْفُطَ، وَسَأَقُولُ ذَلِكِ: وَقُولِيهِ أَنْتِ يَا صَفِيَّةُ، فَلَمَّا دَخَلَ عَلَى سَوْدَةَ، قُلْتُ: تَقُولُ سَوْدَةُ: وَالَّذِي لاَ إِلَهَ إِلَّا هُوَ، لَقَدْ كِدْتُ أَنْ أُبَادِرَهُ بِالَّذِي قُلْتِ لِي وَإِنَّهُ لَعَلَى البَابِ، فَرَقًا مِنْكِ، فَلَمَّا دَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَكَلْتَ مَغَافِيرَ؟ قَالَ: «لاَ» قُلْتُ: فَمَا هَذِهِ الرِّيحُ؟ قَالَ: «سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ» قُلْتُ: جَرَسَتْ نَحْلُهُ العُرْفُطَ، فَلَمَّا دَخَلَ عَلَيَّ قُلْتُ لَهُ مِثْلَ ذَلِكَ، وَدَخَلَ عَلَى صَفِيَّةَ فَقَالَتْ لَهُ مِثْلَ ذَلِكَ، فَلَمَّا دَخَلَ عَلَى حَفْصَةَ قَالَتْ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَسْقِيكَ مِنْهُ؟ قَالَ: «لاَ حَاجَةَ لِي بِهِ» قَالَتْ: تَقُولُ سَوْدَةُ: سُبْحَانَ اللَّهِ، لَقَدْ حَرَمْنَاهُ، قَالَتْ: قُلْتُ لَهَا: اسْكُتِي





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.