தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1079

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் குறித்து வினவினார். (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “நம்முடன் தொழுகையில் கலந்துகொள்வீராக!” என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் (இருட்டு இருக்கும்போதே சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் இருட்டு இருக்கும்போதே (சுப்ஹுத் தொழுகைக்காக) பாங்கு சொன்னார்கள். வைகறை உதயமாகும் போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுதார்கள். பிறகு சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது லுஹ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பின்னர் சூரியன் உயர்ந்திருக்கும்போதே அஸ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் சொல்லுமாறு) பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு செம்மேகம் மறைந்ததும் இஷாத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள்.

மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம் (சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு வெளிச்சம் வந்த பின் சுப்ஹுத் தொழுதார்கள். பிறகு லுஹ்ர் தொழுகைக்கு (வெப்பம் தணிந்த பின் பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு வெப்பம் தணிந்த பின் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் அஸ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு சூரியன் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் இருந்தபோது பொன்னிறம் ஏற்படுவதற்கு முன்பே அஸ்ர் தொழுதார்கள். பிறகு அவர்களிடம் செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு இரவின் “ஒரு பகுதி” அல்லது “மூன்றில் ஒரு பகுதி” (அறிவிப்பாளர் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.) கடந்த பின் இஷாத் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். அதிகாலையில், “கேள்வி கேட்டவர் எங்கே?நீங்கள் கண்ட (இவ்விரு தினங்களின் தொழுகை நேரங்களின்) இடைப்பட்ட நேரமே (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 5

(முஸ்லிம்: 1079)

وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ السَّامِيُّ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ

أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ، فَقَالَ: «اشْهَدْ مَعَنَا الصَّلَاةَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ بِغَلَسٍ، فَصَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ حِينَ زَالَتِ الشَّمْسُ عَنْ بَطْنِ السَّمَاءِ، ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ، ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ حِينَ وَجَبَتِ الشَّمْسُ، ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ حِينَ وَقَعَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ الْغَدَ فَنَوَّرَ بِالصُّبْحِ، ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ فَأَبْرَدَ، ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ لَمْ تُخَالِطْهَا صُفْرَةٌ، ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ قَبْلَ أَنَّ يَقَعَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ عِنْدَ ذَهَابِ ثُلُثِ اللَّيْلِ، أَوْ بَعْضِهِ – شَكَّ حَرَمِيٌّ -» فَلَمَّا أَصْبَحَ، قَالَ: «أَيْنَ السَّائِلُ؟ مَا بَيْنَ مَا رَأَيْتَ وَقْتٌ»


Muslim-Tamil-1079.
Muslim-TamilMisc-970.
Muslim-Shamila-613.
Muslim-Alamiah-970.
Muslim-JawamiulKalim-976.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.