தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2796

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் கைபர் போர் நாளில் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். எனது பாதம், (பக்கத்து ஒட்டகத்தில் பயணம் செய்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதத்தைத் தொட்டது. சூரியன் உதிக்கத் துவங்கிய நேரத்தில் நாங்கள் கைபர்வாசிகளிடம் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் தம் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கோடரிகள்,பேரீச்சங்கூடைகள் மற்றும் மண்வெட்டிகளுடன் (தோட்டந்துரவுகளை நோக்கிப்) புறப்பட்டுவந்தனர். (எங்களைக் கண்டதும்) “முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்து விட்டனர்)” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் களத்தில் இறங்கிவிட்டோமாயின் எச்சரிக்கப்பட்ட அம்மக்களுக்கு அது கெட்ட காலையாகவே அமையும்” என்று கூறினார்கள்.

வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கைபர்வாசிகளைத் தோற்கடித்தான். (போர்ச் செல்வங்களில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களது பங்கில் ஓர் அழகிய இளம் பெண் போய்ச்சேர்ந்தார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு அடிமைகளைக் கொடுத்து அப்பெண்ணை (திஹ்யா (ரலி) அவர்களிடமிருந்து) வாங்கிக்கொண்டார்கள். பிறகு அப்பெண்ணை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து, தமக்காக அலங்காரமும் ஆயத்தமும் செய்யவைத்தார்கள்.

-அறிவிப்பாளர் ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அனஸ் (ரலி) அவர்கள், “உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்திலேயே அப்பெண்ணைக் காத்திருப்புக் காலத்தில் (இத்தா) தங்கவைத்(துப் பரிசோதித்)தார்கள்” என்று கூறினார்கள் என நான் கருதுகிறேன்.-

ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களே அப்பெண் ஆவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை(க் கலந்து தயாரித்த “ஹைஸ்” எனும் பலகாரத்தை)யே மணவிருந்தாக (வலீமா) ஆக்கினார்கள். (முன்னதாக) பூமியில் நன்கு மண்ணைப் பறித்து (குழியாக்கி), தோல் விரிப்பொன்று கொண்டு வரப்பட்டு, அதனுள் அவ்விரிப்பு (விரித்து) வைக்கப்பட்டது. பாலாடைக் கட்டியும் நெய்யும் கொண்டுவரப்(பட்டு, அதில் கொட்டப்)பட்டது. மக்கள் அதிலிருந்து எடுத்து வயிராற உண்டனர். மக்கள், “அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணந்து மனைவியாக்கிக்கொண்டார்களா, அல்லது குழந்தை பெற்றுத்தரும் அடிமைப் பெண்ணாக (உம்முல் வலத்) ஆக்கிக்கொண்டார்களா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பர்தா இட்டு மறைத்தால், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆவார்; பர்தா இட்டு மறைக்காவிட்டால், அவர் அடிமைப் பெண் (உம்முல் வலத்) ஆவார்” என்று பேசிக்கொண்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் புறப்பட நாடியபோது, அவருக்குத் திரையிட்டு மறைத்தார்கள். அவர் ஒட்டகத்தின் கடைக்கோடியில் அமர்ந்திருந்தார். அப்போது மக்கள் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்தாம் என்று அறிந்துகொண்டனர். அவர்கள் மதீனா நெருங்கியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள்; நாங்களும் (எங்கள் வாகனங்களை) விரைவாகச் செலுத்தினோம். அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) “அல்அள்பா” எனும் அந்த ஒட்டகத்திற்குக் கால் இடறியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒட்டகத்திலிருந்து) விழுந்துவிட்டார்கள்; ஸஃபிய்யா (ரலி) அவர்களும் விழுந்துவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். அப்போது பெண்கள் எட்டிப் பார்த்து, “அந்த யூதப் பெண்ணை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்துவானாக!” என்று கூறினர்.

அறிவிப்பாளர் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (அனஸ் (ரலி) அவர்களிடம்), “அபூ ஹம்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விழுந்துவிட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விழுந்து விட்டார்கள்” என விடையளித்தார்கள். தொடர்ந்து அனஸ் (ரலி) அவர் கள் கூறினார்கள்:

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் (ரலி) அவர்களின் மணவிருந்திலும் (வலீமா) நான் கலந்துகொண்டேன். அவ்விருந்தில் ரொட்டியையும் இறைச்சியையும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். (முன்னதாக) மக்களை அழைப்பதற்காக என்னை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். (விருந்து) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து செல்ல நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். இரண்டு மனிதர்கள் எழுந்து செல்லாமல் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (மற்ற) துணைவியரிடம் சென்று, அவர்களில் ஒவ்வொருவருக்கும் “சலாமுன் அலைக்கும்” என முகமன் சொல்லிவிட்டு, “வீட்டாரே! எப்படி இருக்கிறீர்கள்?” என (குசலம்) விசாரிக்கலானார்கள். அதற்கு அவர்கள் “நலமுடன் உள்ளோம், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் (புதிய) துணைவி எப்படி?”என்று கேட்கலாயினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்று” என்றார்கள்.

பேசி முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் செல்ல, அவர்களுடன் நானும் திரும்பினேன். (புது மணப்பெண் தங்கியிருந்த வீட்டின்) வாசலை அடைந்ததும், அப்போதும் அவ்விருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் செல்வதைக் கண்ட அவ்விருவரும் எழுந்து வெளியேறிவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த இருவரும் வெளியேறிவிட்டார்கள் என்று “நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா” அல்லது “இறையறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டதா” என்று எனக்குத் தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புது மணப்பெண்ணிருந்த வீட்டுக்குத்) திரும்பி வந்தார்கள். அவர்களுடன் நானும் திரும்பிவந்தேன். அவர்கள் தமது காலை வாசற்படியில் வைத்ததும் எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். உயர்ந்தோன் அல்லாஹ், “நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உணவுண்ணச் செல்லாதீர்கள்…” எனும் இந்த (33:53ஆவது) வசனத்தை அருளினான்.

Book : 16

(முஸ்லிம்: 2796)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ

كُنْتُ رِدْفَ أَبِي طَلْحَةَ يَوْمَ خَيْبَرَ، وَقَدَمِي تَمَسُّ قَدَمَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَأَتَيْنَاهُمْ حِينَ بَزَغَتِ الشَّمْسُ وَقَدْ أَخْرَجُوا مَوَاشِيَهُمْ، وَخَرَجُوا بِفُئُوسِهِمْ، وَمَكَاتِلِهِمْ، وَمُرُورِهِمْ، فَقَالُوا: مُحَمَّدٌ، وَالْخَمِيسُ، قَالَ: وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ {فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ} [الصافات: 177] “، قَالَ: وَهَزَمَهُمُ اللهُ عَزَّ وَجَلَّ، وَوَقَعَتْ فِي سَهْمِ دِحْيَةَ جَارِيَةٌ جَمِيلَةٌ، فَاشْتَرَاهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعَةِ أَرْؤُسٍ، ثُمَّ دَفَعَهَا إِلَى أُمِّ سُلَيْمٍ تُصَنِّعُهَا لَهُ وَتُهَيِّئُهَا – قَالَ: وَأَحْسِبُهُ قَالَ – وَتَعْتَدُّ فِي بَيْتِهَا، وَهِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ، قَالَ: وَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِيمَتَهَا التَّمْرَ وَالْأَقِطَ وَالسَّمْنَ، فُحِصَتِ الْأَرْضُ أَفَاحِيصَ، وَجِيءَ بِالْأَنْطَاعِ، فَوُضِعَتْ فِيهَا، وَجِيءَ بِالْأَقِطِ وَالسَّمْنِ فَشَبِعَ النَّاسُ، قَالَ: وَقَالَ النَّاسُ: لَا نَدْرِي أَتَزَوَّجَهَا، أَمِ اتَّخَذَهَا أُمَّ وَلَدٍ؟ قَالُوا: إِنْ حَجَبَهَا فَهِيَ امْرَأَتُهُ، وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ أُمُّ وَلَدٍ، فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَبَ حَجَبَهَا، فَقَعَدَتْ عَلَى عَجُزِ الْبَعِيرِ، فَعَرَفُوا أَنَّهُ قَدْ تَزَوَّجَهَا، فَلَمَّا دَنَوْا مِنَ الْمَدِينَةِ، دَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَدَفَعْنَا، قَالَ: فَعَثَرَتِ النَّاقَةُ الْعَضْبَاءُ، وَنَدَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَدَرَتْ، فَقَامَ فَسَتَرَهَا، وَقَدْ أَشْرَفَتِ النِّسَاءُ، فَقُلْنَ: أَبْعَدَ اللهُ الْيَهُودِيَّةَ، قَالَ: قُلْتُ: يَا أَبَا حَمْزَةَ، أَوَقَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: إِي وَاللهِ، لَقَدْ وَقَعَ

– قَالَ أَنَسٌ: وَشَهِدْتُ وَلِيمَةَ زَيْنَبَ، فَأَشْبَعَ النَّاسَ خُبْزًا وَلَحْمًا، وَكَانَ يَبْعَثُنِي فَأَدْعُو النَّاسَ، فَلَمَّا فَرَغَ قَامَ وَتَبِعْتُهُ، فَتَخَلَّفَ رَجُلَانِ اسْتَأْنَسَ بِهِمَا الْحَدِيثُ، لَمْ يَخْرُجَا فَجَعَلَ يَمُرُّ عَلَى نِسَائِهِ، فَيُسَلِّمُ عَلَى كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ: «سَلَامٌ عَلَيْكُمْ، كَيْفَ أَنْتُمْ يَا أَهْلَ الْبَيْتِ؟» فَيَقُولُونَ: بِخَيْرٍ يَا رَسُولَ اللهِ، كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ؟ فَيَقُولُ: «بِخَيْرٍ»، فَلَمَّا فَرَغَ رَجَعَ، وَرَجَعْتُ مَعَهُ، فَلَمَّا بَلَغَ الْبَابَ، إِذَا هُوَ بِالرَّجُلَيْنِ قَدِ اسْتَأْنَسَ بِهِمَا الْحَدِيثُ، فَلَمَّا رَأَيَاهُ قَدْ رَجَعَ قَامَا فَخَرَجَا، فَوَاللهِ مَا أَدْرِي أَنَا أَخْبَرْتُهُ، أَمْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ بِأَنَّهُمَا قَدْ خَرَجَا؟ فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ، فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي أُسْكُفَّةِ الْبَابِ، أَرْخَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ، وَأَنْزَلَ اللهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ: {لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ} [الأحزاب: 53] الْآيَةَ


Tamil-2796
Shamila-1365
JawamiulKalim-2572,
2573




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.