தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2938

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்பமானவையாக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் சென்று அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தபோது, ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும்,அதிலிருந்து தயாரித்த பானத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.

உடனே நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(தை நிறுத்துவ)தற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது,அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். “இல்லை” என்று உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். உடனே “இது என்ன வாடை?” என்று அவர்களிடம் கேளுங்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்)வாடை வீசுவதைக் கடுமையானதாகக் கருதுவார்கள்.) அப்போது அவர்கள், “எனக்கு ஹஃப்ஸா தேன்(கலந்த) பானம் புகட்டினார்” என்று உங்களிடம் கூறுவார்கள். உடனே நீங்கள் “இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (அதன் பிசினை உட்கொண்டு)விட்டு வந்திருக்கலாம். (அதனால் தான் வாடை வருகிறது)” என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது, (நான் சொன்ன படி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலுக்கு வந்தபோதே, உனக்குப் பயந்து நீ என்னிடம் சொன்னபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்ல முனைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நெருங்கியதும் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அப்படியானால் இது என்ன வாடை?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹஃப்ஸா எனக்குத் தேன் (கலந்த) பானம் புகட்டினார்” என்று சொன்னார்கள். நான், “அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (அதன் பிசினை உட்கொண்டு)விட்டு வந்திருக்கலாம். (அதனால்தான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)” என்று கூறினேன்.

(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது,அவர்களிடம் நானும் அவ்வாறே கூறினேன். பிறகு அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவரும் அவ்வாறே கூறினார். பின்னர் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றபோது, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குச் சிறிதளவு தேன் தரட்டுமா?” என்று கேட்டார். அவர்கள் “அது எனக்குத் தேவையில்லை” என்றார்கள்.

(இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (அதை அருந்தவிடாமல்) நாம் தடுத்து விட்டோமே!” என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், “சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)” என்று சொல்வேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

-இதே ஹதீஸ் மேலும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 18

(முஸ்லிம்: 2938)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللهِ قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ، فَكَانَ إِذَا صَلَّى الْعَصْرَ دَارَ عَلَى نِسَائِهِ، فَيَدْنُو مِنْهُنَّ، فَدَخَلَ عَلَى حَفْصَةَ، فَاحْتَبَسَ عِنْدَهَا أَكْثَرَ مِمَّا كَانَ يَحْتَبِسُ، فَسَأَلْتُ عَنْ ذَلِكَ، فَقِيلَ لِي: أَهْدَتْ لَهَا امْرَأَةٌ مِنْ قَوْمِهَا عُكَّةً مِنْ عَسَلٍ، فَسَقَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ شَرْبَةً، فَقُلْتُ: أَمَا وَاللهِ لَنَحْتَالَنَّ لَهُ، فَذَكَرْتُ ذَلِكَ لِسَوْدَةَ، وَقُلْتُ: إِذَا دَخَلَ عَلَيْكِ، فَإِنَّهُ سَيَدْنُو مِنْكِ، فَقُولِي لَهُ: يَا رَسُولَ اللهِ، أَكَلْتَ مَغَافِيرَ؟ فَإِنَّهُ سَيَقُولُ لَكِ: «لَا»، فَقُولِي لَهُ: مَا هَذِهِ الرِّيحُ؟ وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْتَدُّ عَلَيْهِ أَنْ يُوجَدَ مِنْهُ الرِّيحُ، فَإِنَّهُ سَيَقُولُ لَكِ: «سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ»، فَقُولِي لَهُ: جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ، وَسَأَقُولُ ذَلِكِ لَهُ، وَقُولِيهِ أَنْتِ يَا صَفِيَّةُ، فَلَمَّا دَخَلَ عَلَى سَوْدَةَ قَالَتْ: تَقُولُ سَوْدَةُ: وَالَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ لَقَدْ كِدْتُ أَنْ أُبَادِئَهُ بِالَّذِي قُلْتِ لِي، وَإِنَّهُ لَعَلَى الْبَابِ فَرَقًا مِنْكِ، فَلَمَّا دَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: يَا رَسُولَ اللهِ، أَكَلْتَ مَغَافِيرَ؟ قَالَ: «لَا»، قَالَتْ: فَمَا هَذِهِ الرِّيحُ؟ قَالَ: «سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ»، قَالَتْ: جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ، فَلَمَّا دَخَلَ عَلَيَّ، قُلْتُ لَهُ: مِثْلَ ذَلِكَ، ثُمَّ دَخَلَ عَلَى صَفِيَّةَ، فَقَالَتْ بِمِثْلِ ذَلِكَ، فَلَمَّا دَخَلَ عَلَى حَفْصَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللهِ، أَلَا أَسْقِيكَ مِنْهُ؟ قَالَ: «لَا حَاجَةَ لِي بِهِ»، قَالَتْ: تَقُولُ سَوْدَةُ: سُبْحَانَ اللهِ، وَاللهِ لَقَدْ حَرَمْنَاهُ، قَالَتْ: قُلْتُ لَهَا: اسْكُتِي

– قَالَ أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرِ بْنِ الْقَاسِمِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، بِهَذَا سَوَاءً. وحَدَّثَنِيهِ سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ بِهَذَا الْإِسْنَادِ، نَحْوَهُ


Tamil-2938
Shamila-1474
JawamiulKalim-2703




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.