தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4926

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிம்கள் திரளாகக் குழுமியிருந்த ஓர் அவையில், “அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவர்கள்) “பனூ அப்தில் அஷ்ஹல்” குடும்பத்தார் ஆவர்” என்றார்கள். மக்கள், “பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிறகு “பனுந் நஜ்ஜார்” குடும்பத்தார்” என்றார்கள். மக்கள், “பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “பிறகு “பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்” குடும்பத்தார்” என்றார்கள்.

“பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டதற்கு, “பிறகு “பனூ சாஇதா” குடும்பத்தார்” என்று விடையளித்தார்கள். “பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று மககள் கேட்க, “பிறகு அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் குலத்தாரின் பெயரை நான்காவதாகக் கூறியதைக் கேட்டு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கோபத்துடன் எழுந்து, “நான்கு குடும்பங்களில் நாங்கள் தான் கடைசியா?” என்று கேட்டபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது பற்றிப்) பேச முனைந்தார்கள்.

அப்போது அவர்களுடைய குலத்தைச் சேர்ந்த சிலர், “அமருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் குடும்பத்தை நான்கு குடும்பங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதே உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட குடும்பத்தாரின் எண்ணிக்கையே, பெயர் குறிப்பிட்ட குடும்பங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்” என்று கூறினர்.

ஆகவே, சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசாமல் விலகிக்கொண்டார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4926)

وحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: قَالَ أَبُو سَلَمَةَ، وَعُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَهُوَ فِي مَجْلِسٍ عَظِيمٍ مِنَ الْمُسْلِمِينَ «أُحَدِّثُكُمْ بِخَيْرِ دُورِ الْأَنْصَارِ» قَالُوا: نَعَمْ، يَا رَسُولَ اللهِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «بَنُو عَبْدِ الْأَشْهَلِ» قَالُوا: ثُمَّ مَنْ؟ يَا رَسُولَ اللهِ ‍‍ قَالَ: «ثُمَّ بَنُو النَّجَّارِ» قَالُوا: ثُمَّ مَنْ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: ثُمَّ «بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ» قَالُوا: ثُمَّ مَنْ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: ثُمَّ «بَنُو سَاعِدَةَ» قَالُوا: ثُمَّ مَنْ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: «ثُمَّ فِي كُلِّ دُورِ الْأَنْصَارِ خَيْرٌ» فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ مُغْضَبًا، فَقَالَ: أَنَحْنُ آخِرُ الْأَرْبَعِ؟ حِينَ سَمَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَارَهُمْ، فَأَرَادَ كَلَامَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رِجَالٌ مِنْ قَوْمِهِ: اجْلِسْ، أَلَا تَرْضَى أَنْ سَمَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَارَكُمْ فِي الْأَرْبَعِ الدُّورِ الَّتِي سَمَّى؟ فَمَنْ تَرَكَ فَلَمْ يُسَمِّ أَكْثَرُ مِمَّنْ سَمَّى، فَانْتَهَى سَعْدُ بْنُ عُبَادَةَ عَنْ كَلَامِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tamil-4926
Shamila-2512
JawamiulKalim-4575




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.