தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5306

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹன்ழலா பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருப்போம். அப்போது அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். அப்போது நரகத்தை நினைவூட்டுவார்கள். பிறகு நான் எனது வீட்டுக்கு வரும்போது, குழந்தைகளைக் குதூகலப்படுத்துவேன்; மனைவியுடன் விளையாடி மகிழ்வேன்.

(ஒரு நாள் வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்றேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களை (வழியில்) சந்தித்தபோது, அது குறித்து அவர்களிடம் சொன்னேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீங்கள் சொல்வதைப் போன்றுதான் நானும் செய்கிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தோம். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என்ன சொல்கிறீர்?”என்று கேட்டார்கள். அவர்களிடம் (எங்கள் நிலை குறித்த) செய்தியைச் சொன்னேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், “இவர் செய்ததைப் போன்றுதான் நானும் செய்கிறேன்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இப்படிச்) சில நேரம்; (அப்படிச்) சில நேரம். இறைவனைத் துதிக்கும்போதிருக்கும் நிலையில் உங்கள் உள்ளம் எப்போதும் இருக்குமானால், வானவர்கள் உங்களிடம் கைலாகு கொடுத்திருப்பார்கள். நீங்கள் செல்லும் வழிகளில் (அவர்கள் உங்களிடம் வந்து) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறியிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் (நபி (ஸல்) அவர்களின்) எழுத்தரான ஹன்ழலா அத்தமீமீ அல்உசைதீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருக்கும்போது, அவர்கள் எங்களுக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுவார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

Book : 49

(முஸ்லிம்: 5306)

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ حَنْظَلَةَ، قَالَ

كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَعَظَنَا، فَذَكَّرَ النَّارَ، قَالَ: ثُمَّ جِئْتُ إِلَى الْبَيْتِ فَضَاحَكْتُ الصِّبْيَانَ وَلَاعَبْتُ الْمَرْأَةَ، قَالَ: فَخَرَجْتُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: وَأَنَا قَدْ فَعَلْتُ مِثْلَ مَا تَذْكُرُ، فَلَقِينَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ نَافَقَ حَنْظَلَةُ فَقَالَ: «مَهْ» فَحَدَّثْتُهُ بِالْحَدِيثِ، فَقَالَ أَبُو بَكْرٍ: وَأَنَا قَدْ فَعَلْتُ مِثْلَ مَا فَعَلَ، فَقَالَ: «يَا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً، وَلَوْ كَانَتْ تَكُونُ قُلُوبُكُمْ كَمَا تَكُونُ عِنْدَ الذِّكْرِ، لَصَافَحَتْكُمُ الْمَلَائِكَةُ، حَتَّى تُسَلِّمَ عَلَيْكُمْ فِي الطُّرُقِ»

– حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ حَنْظَلَةَ التَّمِيمِيِّ الْأُسَيِّدِيِّ الْكَاتِبِ، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَّرَنَا الْجَنَّةَ وَالنَّارَ، فَذَكَرَ نَحْوَ حَدِيثِهِمَا


Tamil-5306
Shamila-2750
JawamiulKalim-4944




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.