தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4640

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 (நபியே!) கூறுக: மனிதர்களே! திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி எவனுக்குரியதோ அந்த அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உயிரக்கின்றான்; இறக்கச் செய்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட உம்மீ’ (எழுத்தறிவற்ற) தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரோ அல்லாஹ்வையும் அவனது வேத வாக்கு களையும் நம்புகின்றார். ஆகவே, அவரைப் பின்பற்றுங்கள்; அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும் (எனும்7:158ஆவது இறை வசனம்).

 அபுத் தர்தா(ரலி) அறிவித்தார்.

(ஒரு சமயம்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர்(ரலி) கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்து விடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர்(ரலி) மன்னிக்காமல் அபூ பக்ர்(ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால் (தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள்.

(அப்போது) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூ பக்ர்(ரலி) வருவதைக் கண்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்’ என்று கூறினார்கள். (பிறகு) உமர்(ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள். (நடந்த) செய்தியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். (அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூ பக்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்கு வாதத்தை தொடங்கி வைத்ததால் உமரை விட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) ‘மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று சொன்னேன். அப்போது நீங்கள் ‘பொய் சொல்கிறீர்’ என்று கூறினீர்கள். ஆனால், அபூ பக்ர் அவர்களோ, ‘நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்’ என்றார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘ஃகாமர’ எனும் சொல்லுக்கு ‘நன்மையில் முந்தினார்’ என்று பொருள்.

Book : 65

(புகாரி: 4640)

بَابُ {قُلْ: يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ، لاَ إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ، النَّبِيِّ الأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ، وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ}

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَمُوسَى بْنُ هَارُونَ، قَالاَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ العَلاَءِ بْنِ زَبْرٍ، قَالَ: حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الخَوْلاَنِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ، يَقُولُ

كَانَتْ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ مُحَاوَرَةٌ، فَأَغْضَبَ أَبُو بَكْرٍ عُمَرَ فَانْصَرَفَ عَنْهُ عُمَرُ مُغْضَبًا، فَاتَّبَعَهُ أَبُو بَكْرٍ يَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لَهُ، فَلَمْ يَفْعَلْ حَتَّى أَغْلَقَ بَابَهُ فِي وَجْهِهِ، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ وَنَحْنُ عِنْدَهُ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا صَاحِبُكُمْ هَذَا فَقَدْ غَامَرَ» قَالَ: وَنَدِمَ عُمَرُ عَلَى مَا كَانَ مِنْهُ، فَأَقْبَلَ حَتَّى سَلَّمَ وَجَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَصَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الخَبَرَ، قَالَ أَبُو الدَّرْدَاءِ: وَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَعَلَ أَبُو بَكْرٍ يَقُولُ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَأَنَا كُنْتُ أَظْلَمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي صَاحِبِي، هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي صَاحِبِي، إِنِّي قُلْتُ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا، فَقُلْتُمْ: كَذَبْتَ، وَقَالَ أَبُو بَكْرٍ: صَدَقْتَ ” قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” غَامَرَ: سَبَقَ بِالخَيْرِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.