தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2686

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது.

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) இவையனைத்தும் மறைவான செய்திகள். இவற்றை உங்களுக்கு வஹீ (எனும் வேத வெளிப்பாட்டின்) மூலம் நாம் அறிவிக்கின்றோம். (இறையில்லத்தின் சேவகர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப்பாளராவது என்று முடிவு செய்திடத் தங்கள் எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்த போதும், தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருந்த போதும் (நீங்கள் அவர்களிடையே இருக்கவில்லை.) (3:44)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் தங்கள் எழுதுகோல்களைக் குலுக்கிப் போட்டார்கள்; அவர்களது எழுதுகோல்கள் நீரோட்டத்துடன் சென்று விட்டன. ஸகரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரோட்டத்தை மிகைத்து (அதில் அடித்துச் செல்லப்படாமல் நின்று) விட்டது. ஆகவே, ஸகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

மேலும், அல்லாஹ் கூறுகிறான்: சீட்டுக் குலுக்கலில் (யூனுஸ்) பங்கு பெற்றார்; அதில் தோற்றுப் போய் விட்டார். (37:141)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தை சத்தியப் பிரமாணம் செய்யும்படி அழைத்தார்கள். அவர்கள் விரைந்து ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு வந்தார்கள்; ஆகவே, அவர்களில் எவர் (முதலில்) சத்தியம் செய்வது என்று (முடிவு செய்ய) அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

2686. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக் கொடுப்பவரும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள்.

எனவே, கீழ்த் தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த் தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, ‘உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். அவன், ‘நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. (அதனால், கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தித் கொள்வேன்)’ என்று கூறினான். (துளையிட விடாமல்) அவனுடைய இரண்டு கைகளையும் அவர்கள் பிடித்தால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பறிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட) விட்டுவிட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள். என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
Book : 52

(புகாரி: 2686)

بَابُ القُرْعَةِ فِي المُشْكِلاَتِ

وَقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {إِذْ يُلْقُونَ أَقْلاَمَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ} [آل عمران: 44] وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” اقْتَرَعُوا فَجَرَتْ الأَقْلاَمُ مَعَ الجِرْيَةِ، وَعَالَ قَلَمُ زَكَرِيَّاءَ الجِرْيَةَ، فَكَفَلَهَا زكَرِيَّاءُ

وَقَوْلِهِ: {فَسَاهَمَ} [الصافات: 141]: «أَقْرَعَ»، {فَكَانَ مِنَ المُدْحَضِينَ} [الصافات: 141]: «مِنَ المَسْهُومِينَ»

وَقَالَ أَبُو هُرَيْرَةَ: ” عَرَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَوْمٍ اليَمِينَ فَأَسْرَعُوا، فَأَمَرَ أَنْ يُسْهِمَ بَيْنَهُمْ: أَيُّهُمْ يَحْلِفُ

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي الشَّعْبِيُّ، أَنَّهُ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

مَثَلُ المُدْهِنِ فِي حُدُودِ اللَّهِ، وَالوَاقِعِ فِيهَا، مَثَلُ قَوْمٍ اسْتَهَمُوا سَفِينَةً، فَصَارَ بَعْضُهُمْ فِي أَسْفَلِهَا وَصَارَ بَعْضُهُمْ فِي أَعْلاَهَا، فَكَانَ الَّذِي فِي أَسْفَلِهَا يَمُرُّونَ بِالْمَاءِ عَلَى الَّذِينَ فِي أَعْلاَهَا، فَتَأَذَّوْا بِهِ، فَأَخَذَ فَأْسًا فَجَعَلَ يَنْقُرُ أَسْفَلَ السَّفِينَةِ، فَأَتَوْهُ فَقَالُوا: مَا لَكَ، قَالَ: تَأَذَّيْتُمْ بِي وَلاَ بُدَّ لِي مِنَ المَاءِ، فَإِنْ أَخَذُوا عَلَى يَدَيْهِ أَنْجَوْهُ وَنَجَّوْا أَنْفُسَهُمْ، وَإِنْ تَرَكُوهُ أَهْلَكُوهُ وَأَهْلَكُوا أَنْفُسَهُمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.