Author: Farook

Bukhari-33

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 நயவஞ்சகனின் அடையாளங்கள்.

33. ‘நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 2


«آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ »


Bukhari-32

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 அநீதிகளில் ஏற்றத்தாழ்வு உண்டு.

32. ‘இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்’ (திருக்குர்ஆன் 06:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது

நபித்தோழர்கள் ‘நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?’ எனக் கேட்டனர். அப்போது, ‘நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம்’ (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book : 2


قَالَ: لَمَّا نَزَلَتْ: { الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ } [الأنعام: 82] قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا لَمْ يَظْلِمْ؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ} لقمان: 13


Bukhari-31

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 23

முஃமின்களில் இரு சாரார் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமரசம் செய்து வையுங்கள் எனும் (49:9ஆவது) இறைவசனம்.

அப்படிச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடியவர்களையும் அல்லாஹ் (இந்த வசனத்தில்) முஃமின்கள் (இறை நம்பிக்கையாளர்கள்) என்றே குறிப்பிட்டிருக்கின்றான்.

31. இவருக்கு (அலீ-ரலிக்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா (ரலி) என்னைச் சந்தித்து ‘எங்கே செல்கிறீர்?’ எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் ‘நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, ‘அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்’ என கூறினார்’ என அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார்.

அத்தியாயம்: 2


«إِذَا التَقَى المُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالقَاتِلُ وَالمَقْتُولُ فِي النَّارِ»، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا القَاتِلُ فَمَا بَالُ المَقْتُولِ قَالَ: «إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ»


Bukhari-30

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 பாவங்கள் (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் காலத்துச் செயல்களாகும்.

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதைத் தவிர, மற்ற பாவங்களைச் செய்தால் ஒருவரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று சொல்லி விடமுடியாது. ஏனெனில், அபூதர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்து மூடப்பழக்கங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதர் நீங்கள் என்று சொன்னார்கள்.

மேலும் உயந்தோன் அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை அவன் நாடியவர்களுக்கு மன்னித்து விடுகின்றான் (4:48) என்று கூறுகின்றான்.

30. ‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன்.

நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்!

உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான்.

لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ»


Bukhari-29

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 கணவனின் உதவிகளுக்கு நன்றி செய்யாமையும்; (இறை) நிராகரிப்பு என்பது ஏற்றத் தாழ்வுடையது என்பதும்.

இது குறித்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

29. ‘எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது,

‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 2


« أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ، يَكْفُرْنَ »

قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟

« قَالَ: يَكْفُرْنَ العَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ »


Bukhari-28

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 சலாமைப் பரப்புவதும் இஸ்லாத்தின் ஓர் அம்சமே.

அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: தார்மீக நேர்மையுடன் நடப்பது; உலகெங்கிலும் சலாமைப் பரப்புவது; வறுமை வயப்பட்டிருக்க (நல்வழியில்) செலவளிப்பது ஆகிய முப்பண்புகளை எவர் (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டாரோ அவர் நிச்சயமாக ஈமானையே (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டவராவார்.

28. ‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 2


أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ»


Bukhari-27

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 மனப்பூர்வமாக அன்றி, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ,உயிருக்குப்பயந்தோ இஸ்லாத்தை ஏற்றால் (அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாது).

ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (நபியே!) நாங்களும் ஈமான் கொண்டுவிட்டோம் என்று கிராமவாசிகளில் சிலர் (உம்மிடம்) கூறினார்கள். நீர் கூறும்: நீங்கள் உண்மையில் ஈமான் கொள்ளவில்லை; ஆயினும் நாங்கள் (இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஏற்படும் இழிவிலிருந்து) தப்பித்துக் கொண்டோம்என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்! என்று (49:14) கூறுகின்றான்.

மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும். ஏனெனில் புகழோங்கிய அல்லாஹ், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட ஒரே) மார்க்கம் இஸ்லாம் தான்(3:19) என்று கூறுகின்றான்.

27. ‘நபி(ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி(ஸல்) ஒரு குழுவினருக்குக் கொடுத்தார்கள். ஒருவரைவிட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் இறைநம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்’ என கேட்டதற்கு, ‘அவரை முஸ்லிம் என்றும் சொல்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன்.

தொடர்ந்து

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى رَهْطًا وَسَعْدٌ جَالِسٌ، فَتَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا هُوَ أَعْجَبُهُمْ إِلَيَّ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: «أَوْ مُسْلِمًا» فَسَكَتُّ قَلِيلًا، ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ، فَعُدْتُ لِمَقَالَتِي، فَقُلْتُ: مَا لَكَ عَنْ فُلاَنٍ؟ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: «أَوْ مُسْلِمًا». ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي، وَعَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «يَا سَعْدُ إِنِّي لَأُعْطِي الرَّجُلَ، وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ» وَرَوَاهُ يُونُسُ، وَصَالِحٌ، وَمَعْمَرٌ، وَابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ


Bukhari-26

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 இறை நம்பிக்கை (ஈமான்) என்றாலே அது நற்செயல்தான் என்று சிலர் வாதிடுகின்றனர்.

ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ், இது தான் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும் (43:72) என்று கூறுகின்றான்.

உம் இறைவன் மீதாணையாக! அவர்கள் அனைவரிடமும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிப்போம் எனும் (15:92ஆவது) இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில்

(அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி என்பதற்கு) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனும் நம்பிக்கை பற்றி விசாரிப்போம் என்று இப்னு உமர் (ரலி), முஜாஹித் (ரஹ்) போன்ற மார்க்க அறிஞர்களில் பலர் கூறியிருக்கிறார்கள்.

(சொர்க்க வாழ்வு பற்றி பேசிவிட்டு) அல்லாஹ் இது போன்றவற்றுக்காகவே (உலகில்) செயல்படுபவர்கள் செயல்படட்டும் (37:61) என்று கூறுகிறான்.

26. ‘செயல்களில் சிறந்தது எது?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது’ என்றார்கள். ‘பின்னர் எது?’ என வினவப்பட்டதற்கு, ‘இறைவழியில் போரிடுதல்’ என்றார்கள். ‘பின்னர் எது?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அங்கீகரிக்கப்படும் ஹஜ்’ என்றார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 2


أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ فَقَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ». قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مَبْرُورٌ»


Bukhari-25

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி,தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தையும் வழங்கிவந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் எனும் (9:5ஆவது) இறைவசனம்.

25. ‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 2


«أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ»


Bukhari-24

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 வெட்கம் இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்.

24. ‘அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 2


«دَعْهُ فَإِنَّ الحَيَاءَ مِنَ الإِيمَانِ»


Next Page » « Previous Page