தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-45

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி), அல்லது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தபூக் போரின்போது மக்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடவும் (அவற்றின் கொழுப்புகளை உருக்கி) எண்ணெய் எடுத்துக்கொள்ளவும் செய்வோமே!” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவ்வாறே) செய்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு நீங்கள் செய்(ய அனுமதியளித்)தால் வாகனப் பிராணிகள் குறைந்துவிடும். இதைவிடுத்து, மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். பின்னர் அவற்றில் பெருக்கம் (பரக்கத்) ஏற்பட அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்லாஹ் அதில் (பெருக்கத்தை) ஏற்படுத்தக்கூடும்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்” என்று கூறிவிட்டு, ஒரு தோல் விரிப்பைக் கொண்டுவந்து விரிக்கச் சொன்னார்கள். பிறகு மக்களிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொன்னார்கள்.

(மக்களில்) ஒருவர் ஒரு கையளவு கோதுமையைக் கொண்டுவரலானார். மற்றொருவர் ஒரு கையளவு பேரீச்சம் பழங்களுடன் வந்தார். இன்னொருவர் ரொட்டித் துண்டு ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த விரிப்பின் மீது சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு “உங்கள் பைகளில் நிரப்பிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே மக்களும் தம் பைகளில் நிரப்பிக் கொண்டனர். அந்தப் படையினர் தம்மிடம் இருந்த எந்தப் பையையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் நிரப்பிக்கொண்டனர். மக்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டனர். (இருப்பினும்) இன்னும் அது எஞ்சியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரண்டு உறுதிமொழிகளையும் சந்தேகம் கொள்ளாமல் நம்பிய நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியாரும் சொர்க்கத்தைவிட்டுத் தடுக்கப்படமாட்டார்”என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 1

(முஸ்லிம்: 45)

(27) حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَالَ أَبُو كُرَيْبٍ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَوْ عَنْ أَبِي سَعِيدٍ – شَكَّ الْأَعْمَشُ – قَالَ

لَمَّا كَانَ غَزْوَةُ تَبُوكَ أَصَابَ النَّاسَ مَجَاعَةٌ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، لَوْ أَذِنْتَ لَنَا فَنَحَرْنَا نَوَاضِحَنَا، فَأَكَلْنَا وَادَّهَنَّا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْعَلُوا»، قَالَ: فَجَاءَ عُمَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنْ فَعَلْتَ قَلَّ الظَّهْرُ، وَلَكِنْ ادْعُهُمْ بِفَضْلِ أَزْوَادِهِمْ، ثُمَّ ادْعُ اللهَ لَهُمْ عَلَيْهَا بِالْبَرَكَةِ، لَعَلَّ اللهَ أَنْ يَجْعَلَ فِي ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ»، قَالَ: فَدَعَا بِنِطَعٍ، فَبَسَطَهُ، ثُمَّ دَعَا بِفَضْلِ أَزْوَادِهِمْ، قَالَ: فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِكَفِّ ذُرَةٍ، قَالَ: وَيَجِيءُ الْآخَرُ بِكَفِّ تَمْرٍ، قَالَ: وَيَجِيءُ الْآخَرُ بِكَسْرَةٍ حَتَّى اجْتَمَعَ عَلَى النِّطَعِ مِنْ ذَلِكَ شَيْءٌ يَسِيرٌ، قَالَ: فَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ بِالْبَرَكَةِ، ثُمَّ قَالَ: «خُذُوا فِي أَوْعِيَتِكُمْ»، قَالَ: فَأَخَذُوا فِي أَوْعِيَتِهِمْ، حَتَّى مَا تَرَكُوا فِي الْعَسْكَرِ وِعَاءً إِلَّا مَلَئُوهُ، قَالَ: فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، وَفَضَلَتْ فَضْلَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنِّي رَسُولُ اللهِ، لَا يَلْقَى اللهَ بِهِمَا عَبْدٌ غَيْرَ شَاكٍّ، فَيُحْجَبَ عَنِ الْجَنَّةِ»


Tamil-45
Shamila-27
JawamiulKalim-43




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.