தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2634

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது, அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டும் யானைப் படையைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) ஓரிறை நம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பு எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும்கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் சிறிது நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. ஆகவே, இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருள், அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவர்,கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை பெற்றிருக்கிறாரோ அவர் இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒன்று, (சட்டப்படி) இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்ளலாம்; அல்லது பழிவாங்கிக்கொள்ளலாம்”என்று கூறினார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (செடிகொடிகள் பிடுங்கப்படாது என்பதில்) “இத்கிர்” புல்லைத் தவிரவா?ஏனெனில், அதை நாங்கள் எங்கள் சவக்குழிகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோமே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இத்கிர் புல்லைத் தவிர” என்று விடையளித்தார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அபூஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் எனும் அபூஷாஹ் (ரலி) அவர்களது சொல் எதைக் குறிக்கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையை (எழுதிக் கொடுக்கச் சொன்னதை)யே குறிக்கிறது” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2634)

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنِ الْوَلِيدِ، قَالَ زُهَيْرٌ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ قَالَ

لَمَّا فَتَحَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ، قَامَ فِي النَّاسِ، فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ. ثُمَّ قَالَ: ” إِنَّ اللهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ، وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ، وَإِنَّهَا لَنْ تَحِلَّ لِأَحَدٍ كَانَ قَبْلِي، وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، وَإِنَّهَا لَنْ تَحِلَّ لِأَحَدٍ بَعْدِي، فَلَا يُنَفَّرُ صَيْدُهَا، وَلَا يُخْتَلَى شَوْكُهَا، وَلَا تَحِلُّ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ، وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ: إِمَّا أَنْ يُفْدَى، وَإِمَّا أَنْ يُقْتَلَ “، فَقَالَ الْعَبَّاسُ: إِلَّا الْإِذْخِرَ يَا رَسُولَ اللهِ، فَإِنَّا نَجْعَلُهُ فِي قُبُورِنَا وَبُيُوتِنَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِلَّا الْإِذْخِرَ» فَقَامَ أَبُو شَاهٍ – رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ – فَقَالَ: اكْتُبُوا لِي يَا رَسُولَ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبُوا لِأَبِي شَاهٍ»، قَالَ الْوَلِيدُ: فَقُلْتُ لِلْأَوْزَاعِيِّ: مَا قَوْلُهُ: اكْتُبُوا لِي يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Tamil-2634
Shamila-1355
JawamiulKalim-2422




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.