Category: புஹாரி

Bukhari

Bukhari-5883

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59

பெண்கள் கம்மல் அணிவது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி பெண்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் காதுகளையும் கழுத்துகளையும் நோக்கி (அவற்றிலுள்ள நகைகளைக் கழற்றித் தர கைகளைக் கொண்டு) சென்றதை நான் கண்டேன்.93

5883. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

(நோன்புப்) பெருநாளில் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே, ஒரு பெண் தன்னுடைய கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.

Book : 77


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى  يَوْمَ العِيدِ رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا، ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ،

فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي قُرْطَهَا»


Bukhari-5882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58

கழுத்து மாலைகளை இரவல் வாங்குதல்.

5882. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

(என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் அங்கசுத்தி (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பி வந்து) நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ (செய்து கொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருளினான்.

இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில், ‘அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவித்தார்.’ என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.92

Book : 77


«هَلَكَتْ قِلاَدَةٌ لِأَسْمَاءَ، فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهَا رِجَالًا، فَحَضَرَتِ الصَّلاَةُ وَلَيْسُوا عَلَى وُضُوءٍ، وَلَمْ يَجِدُوا مَاءً، فَصَلَّوْا وَهُمْ عَلَى غَيْرِ وُضُوءٍ،

فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ»

زَادَ ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ


Bukhari-5881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57

பெண்கள் கழுத்தணிகளையும் நறுமண மாலைகளையும் அணிதல்.

இது (சந்தன மாலை போன்ற) நறுமண மாலைகளைக் குறிக்கும்.

5881. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளில் (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை.

பிறகு பெண்களிடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும், நறுமண மாலைகளையும் (கழற்றி) தர்மமாகத் தந்தார்கள்.

Book : 77


«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ أَتَى النِّسَاءَ، فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تَصَدَّقُ بِخُرْصِهَا وَسِخَابِهَا»


Bukhari-5880

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56

பெண்கள் மோதிரம் அணிவது.

ஆயிஷா (ரலி) அவர்கள் தங்க மோதிரங்களை அணிந்திருந்தார்கள்.

5880. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாளி(ன் தொழுகையி)ல் கலந்து கொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

‘பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் (தம்) மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் துணியில் போடலானார்கள்’ என்று இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.91

Book : 77


«شَهِدْتُ العِيدَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى قَبْلَ الخُطْبَةِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَزَادَ ابْنُ وَهْبٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ: «فَأَتَى النِّسَاءَ، فَجَعَلْنَ يُلْقِينَ الفَتَخَ وَالخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ»


Bukhari-5879

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5879. அனஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களின் மோதிரம் (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூ பக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் அபூ பக்ரின்) கரத்தில் இருந்தது. அபூ பக்ர் (ரலி) அவர்களுக்குப் பின் உமர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் உமரின்) கரத்தில் இருந்தது.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது அவர்கள் (ஒருமுறை) அரீஸ் எனும் கிணற்றின் (விளிம்பின்) மீது அமர்ந்திருந்தபோது (ஏதோ சிந்தனையில் தம்மையறியாமல்) மோதிரத்தைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்கள். அப்போது அது (தவறி கிணற்றுக்குள்) விழுந்துவிட்டது. (அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக) உஸ்மான் (ரலி) அவர்களுடன் நாங்கள் மூன்று நாள்கள் (அங்கு) போய்வந்து கொண்டிருந்தோம். பிறகு, கிணற்று நீரை இரைத்து(த் தூர்வாரி)ப் பார்த்தார்கள். அப்போதும் அது எங்களுக்குக் கிடைக்கவில்லை.90

Book :77


كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ، وَفِي يَدِ أَبِي بَكْرٍ بَعْدَهُ، وَفِي يَدِ عُمَرَ بَعْدَ أَبِي بَكْرٍ فَلَمَّا كَانَ عُثْمَانُ، جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسَ قَالَ: فَأَخْرَجَ الخَاتَمَ فَجَعَلَ يَعْبَثُ بِهِ فَسَقَطَ، قَالَ: فَاخْتَلَفْنَا ثَلاَثَةَ أَيَّامٍ مَعَ عُثْمَانَ، فَنَزَحَ البِئْرَ فَلَمْ يَجِدْهُ


Bukhari-5878

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 55

மோதிரத்தில் மூன்று வரிகளில் இலச்சினை பொறிக்கலாமா?

5878. அனஸ் (ரலி) அறிவித்தார்:

அபூ பக்ர் (ரலி) அவர்கள் கலீஃபா (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அவர்கள் (ஸகாத்தின் அளவை விளக்கி) எனக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது (அதில் காணப்பட்ட) மோதிர (முத்திரையின்) இலச்சினை மூன்று வரிகள் கொண்டதாயிருந்தது.

‘முஹம்மது’ என்பது ஒரு வரியிலும், ‘ரசூல்’ என்பது ஒரு வரியிலும், ‘அல்லாஹ்’ என்பது ஒரு வரியிலும் இருந்தது.

Book : 77


أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لَمَّا اسْتُخْلِفَ كَتَبَ لَهُ، ” وَكَانَ نَقْشُ الخَاتَمِ ثَلاَثَةَ أَسْطُرٍ: مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ


Bukhari-5877

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54

“எனது மோதிரத்தின் இலச்சினை போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது.

5877. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள்.

மேலும், ‘நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என இலச்சினை பொறித்துள்ளேன். எனவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்’ என்று கூறினார்கள்.89

Book : 77


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، وَنَقَشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ،

وَقَالَ: «إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا مِنْ وَرِقٍ، وَنَقَشْتُ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَلاَ يَنْقُشَنَّ أَحَدٌ عَلَى نَقْشِهِ»


Bukhari-5876

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53

மோதிரக் குமிழை உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொள்வது.

5876. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தம் உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்தார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘நான் அதைச் செய்திருந்தேன். ஆனால் அதை நான் இனி அணியமாட்டேன்’ என்று கூறிவிட்டு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மக்களும் எறிந்துவிட்டனர்.88

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுவைரிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் மோதிரத்தைத்) தம் வலக் கையில் அணிந்துகொண்டார்கள்’ என்று சொன்னதாகவே எண்ணுகிறேன்.

Book : 77


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَجَعَلَ فَصَّهُ فِي بَطْنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ، فَاصْطَنَعَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ، فَرَقِيَ المِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، فَقَالَ: «إِنِّي كُنْتُ اصْطَنَعْتُهُ، وَإِنِّي لاَ أَلْبَسُهُ» فَنَبَذَهُ، فَنَبَذَ النَّاسُ قَالَ جُوَيْرِيَةُ: وَلاَ أَحْسِبُهُ إِلَّا قَالَ: فِي يَدِهِ اليُمْنَى


Bukhari-5875

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52

முத்திரை பதிப்பதற்காக, அல்லது வேதக்காரர்கள் முதலானோருக்கு மடல் வரைவதற்காக மோதிரம் தயாரித்(து அணி)தல்.86

5875. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது அவர்களிடம், ‘தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமர்கள் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்’ என்று கூறப்பட்டது.

எனவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களின் கையில் (பிரகாசித்த) அதன் வெண்மையை (இப்போதும்) பார்ப்பது போன்று உள்ளது.87

Book : 77


لَمَّا أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ قِيلَ لَهُ: إِنَّهُمْ لَنْ يَقْرَءُوا كِتَابَكَ إِذَا لَمْ يَكُنْ مَخْتُومًا، فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، وَنَقْشُهُ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ


Bukhari-5874

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51

சுண்டு விரலில் மோதிரம் அணிதல்.

5874. அனஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன்.85

Book : 77


صَنَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا، قَالَ: «إِنَّا اتَّخَذْنَا خَاتَمًا، وَنَقَشْنَا فِيهِ نَقْشًا، فَلاَ يَنْقُشَنَّ عَلَيْهِ أَحَدٌ» قَالَ: فَإِنِّي لَأَرَى بَرِيقَهُ فِي خِنْصَرِهِ


Next Page » « Previous Page