Category: இப்னுமாஜா

Ibn-Majah-4227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

எண்ணம்.

4227. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்பதிப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்.

எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்கவிரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என  மக்களுக்கு உமர் (ரலி) அவர்கள் உரைநிகழ்த்தும் போது கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அல்கமா பின் வக்காஸ் அல்லைஸிய்யீ (ரஹ்)


إِنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَهُوَ يَخْطُبُ النَّاسَ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ، وَإِلَى رَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ، وَإِلَى رَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»


Ibn-Majah-3547

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3547. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. “அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக” என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: கவ்லா பின்த் ஹகீம் (ரலி)


لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا نَزَلَ مَنْزِلًا قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْمَنْزِلِ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ


Ibn-Majah-1595

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1595. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறந்தவருக்காக அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக,) ஒரு யூதப்பெண் இறந்தபோது (அவரது குடும்பத்தினர்) அவருக்காக அழுவதை செவியேற்ற நபி (ஸல்) அவர்கள், “இவரின் குடும்பத்தினர் அவருக்காக அழுகின்றனர்; ஆனால் அவரோ கப்ரில் வேதனைசெய்யப்படுகிறார்” என்றுதான் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உபைதுல்லாஹ் (ரஹ்)


إِنَّمَا كَانَتْ يَهُودِيَّةٌ مَاتَتْ، فَسَمِعَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكُونَ عَلَيْهَا، قَالَ: «فَإِنَّ أَهْلَهَا يَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا تُعَذَّبُ فِي قَبْرِهَا»


Ibn-Majah-682

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அஸர் தொழுகையின் நேரம்.

682. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي، وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Ibn-Majah-786

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஜமாஅத்துடன்) கூட்டாக தொழுவதின் சிறப்பு.

786. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தன்னுடைய வீட்டிலும், கடைத்தெருவிலும் தொழும் தொழுகைகளை விட ஜமாஅத்துடன் சேர்ந்து தொழும் தொழுகை இருபதுக்கும் மேற்பட்ட நன்மைகளை அதிகரித்து விடுகின்றது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ، تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً»


Ibn-Majah-787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«فَضْلُ الْجَمَاعَةِ عَلَى صَلَاةِ أَحَدِكُمْ وَحْدَهُ خَمْسٌ وَعِشْرُونَ جُزْءًا»


Ibn-Majah-807

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

தொழுகையில் பாதுகாவல் தேடுதல்.

807. (ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், அல்லாஹு அக்பர் கபீரா! அல்லாஹு அக்பர் கபீரா! (மூன்றுதடவை), அல்ஹம்துலில்லாஹி கஸீரா! அல்ஹம்துலில்லாஹி கஸீரா! (மூன்றுதடவை), ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா! (மூன்றுதடவை), அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினஷ்ஷைத்தானிர்ரஜீம் மின் ஹம்ஸிஹீ, வ நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ…என்று கூறினார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! (மூன்றுதடவை), அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! (மூன்றுதடவை),  காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன். (மூன்றுதடவை). விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், அவனுடைய தீய தூண்டுதல், துப்புதல், ஊதுதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.)

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா அவர்கள் கூறினார்:

ஷைத்தானின் தீய தூண்டுதல் என்றால் பைத்தியம்; அவனுடைய ஊதுதல் என்றால் கவிதை; அவனுடைய துப்புதல் என்றால் பெருமை என்று பொருளாகும்.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ، قَالَ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا» ثَلَاثًا، «الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا» ثَلَاثًا، «سُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا» ثَلَاثَ مَرَّاتِ، «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، وَنَفْثِهِ»

قَالَ عَمْرٌو: هَمْزُهُ: الْمُوتَةُ، وَنَفْثُهُ: الشِّعْرُ، وَنَفْخُهُ: الْكِبْرُ


Ibn-Majah-188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

188. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நான் வீட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் கணவனைப் பற்றி முறையிட்டு வாக்குவாதம் செய்தார். அவள் கூறியதை நான் (சரியாக) கேட்கவில்லை. (ஆனால் அந்தப் பெண்ணிற்காக அல்லாஹ் விரைவாக) “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை இறக்கி அருளினான்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)


الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ، لَقَدْ جَاءَتِ الْمُجَادِلَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا فِي نَاحِيَةِ الْبَيْتِ، تَشْكُو زَوْجَهَا، وَمَا أَسْمَعُ مَا تَقُولُ، فَأَنْزَلَ اللَّهُ: {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا} [المجادلة: 1]


Ibn-Majah-2063

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2063. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து பொருளின் சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்! நபி (ஸல்) அவர்களிடம் கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள் வந்து தன் கணவனைப் பற்றி முறையிட்டுக்கொண்டிருந்தார். அவர் கூறிய சிலவை எனக்கு கேட்டது. சிலவை எனக்கு சரியாக கேட்கவில்லை.

கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள், (நபி ஸல் அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! எனது கணவர் (அவ்ஸ் பின் ஸாமித்-ரலி) எனது இளமையை பயன்படுத்திக்கொண்டார். அவருக்காக வாரிசுகளை பெற்றுக்கொடுத்தேன். இப்போது எனக்கு வயோதிகம் ஏற்பட்டு அவருக்காக வாரிசுகள் பெற்றுக் கொடுப்பது நின்றுவிட்டது. அதனால் அவர் என்னை “ளிஹார்” செய்துவிட்டார் என்று கூறி, “அல்லாஹ்வே! உன்னிடம் இதை முறையிடுகிறேன் என்றும் கூறினார். சிறிது நேரத்திற்குள் ஜிப்ரீல் (அலை) அவர்கள், “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை (நபி-ஸல்-அவர்களுக்கு) கொண்டுவந்தார்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)

குறிப்பு: ளிஹார் என்பது கணவன் தன் மனைவியைப் பார்த்து, “நீ எனக்கு என் தாயின் முதுகு போல் ஹராம் ஆவாய்” என்று

تَبَارَكَ الَّذِي وَسِعَ سَمْعُهُ كُلَّ شَيْءٍ، إِنِّي لَأَسْمَعُ كَلَامَ خَوْلَةَ بِنْتِ ثَعْلَبَةَ وَيَخْفَى عَلَيَّ بَعْضُهُ، وَهِيَ تَشْتَكِي زَوْجَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ تَقُولُ: يَا رَسُولَ اللَّهِ، أَكَلَ شَبَابِي، وَنَثَرْتُ لَهُ بَطْنِي، حَتَّى إِذَا كَبِرَتْ سِنِّي، وَانْقَطَعَ وَلَدِي، ظَاهَرَ مِنِّي، اللَّهُمَّ إِنِّي أَشْكُو إِلَيْكَ، فَمَا بَرِحَتْ حَتَّى نَزَلَ جِبْرَائِيلُ بِهَؤُلَاءِ الْآيَاتِ: {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ} [المجادلة: 1]


Ibn-Majah-4045

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4045. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்ட ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்குப் பின்னர் வேறெவரும் அவர்களிடமிருந்து அதைக் கேட்டு உங்களுக்கு அறிவிக்கமுடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கல்வி அகற்றப்படுவதும்; அறியாமை வெளிப்படுவதும்; விபசாரம் பரவலாக நடைபெறுவதும்; மது (அதிகமாக) அருந்தப்படுவதும்; (குடும்பத்தில்) ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருக்கும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை குறைந்து) போய், பெண்கள் அதிகமாக ஆவதும் யுகமுடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்.

அறிவிப்பவர்: கதாதா (ரஹ்)


أَلَا أُحَدِّثُكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا يُحَدِّثُكُمْ بِهِ أَحَدٌ بَعْدِي سَمِعْتُهُ مِنْهُ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَفْشُوَ الزِّنَا، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَذْهَبَ الرِّجَالُ وَيَبْقَى النِّسَاءُ، حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً قَيِّمٌ وَاحِدٌ»


Next Page » « Previous Page