Category: முஸ்லிம்

Muslim-872

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

872. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் மக்களுக்குத் தொழுவித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது கழுதையொன்றில் பயணித்தபடி நான் அவர்களை நோக்கிச் சென்றேன். (எனது) கழுதை (தொழுகையாளிகளின்) அணியில் ஒரு பகுதிக்கு முன்னால் நடந்துசென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன்.

Book : 4


أَنَّهُ أَقْبَلَ يَسِيرُ عَلَى حِمَارٍ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَائِمٌ يُصَلِّي بِمِنًى فِي حَجَّةِ الْوَدَاعِ يُصَلِّي بِالنَّاسِ» قَالَ: فَسَارَ الْحِمَارُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، ثُمَّ نَزَلَ عَنْهُ فَصَفَّ مَعَ النَّاسِ


Muslim-871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

871. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது) மினாவில் (தடுப்பு எதையும் முன்னோக்காமல்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன். -அந்த நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன்.- (தொழுதுகொண்டிருந்தவர்களின்) அணிக்கு முன்னால் நான் கடந்துசென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டு விட்டுத் தொழுகை அணியினூடே நுழைந்து (நின்று)கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்துசென்ற)தற்காக என்னை யாரும் ஆட்சேபிக்கவில்லை.

Book : 4


أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى» فَمَرَرْتُ بَيْنَ يَدَيِ الصَّفِّ، فَنَزَلْتُ فَأَرْسَلْتُ الْأَتَانَ تَرْتَعُ وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ


Muslim-870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

870. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஹகம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தைப் பெற்றுக்கொள்ள மக்கள் போட்டியிடலாயினர் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

Book : 4


فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ


Muslim-869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

869. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது ஒரு நாள்) நண்பகல் நேரத்தில் பத்ஹாவை (அப்தஹ்) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு லுஹர் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்து, அஸ்ர் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று (நடப்பட்டு) இருந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்கள் மற்றும் கழுதைகள் (உள்ளிட்ட கால்நடைகள்) கடந்துசென்றுகொண்டிருந்தன எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 4


«خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْهَاجِرَةِ إِلَى الْبَطْحَاءِ فَتَوَضَّأَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ» قَالَ شُعْبَةُ: وَزَادَ فِيهِ عَوْنٌ، عَنْ أَبِيهِ أَبِي جُحَيْفَةَ: وَكَانَ يَمُرُّ مِنْ وَرَائِهَا الْمَرْأَةُ وَالْحِمَارُ.


Muslim-868

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

868. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், மாலிக் பின் மிஃக்வல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நண்பகல் நேரமானபோது பிலால் (ரலி) அவர்கள் வந்து தொழுகைக்காக அறிவிப்புச் செய்தார்கள் எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

Book : 4


فَلَمَّا كَانَ بِالْهَاجِرَةِ خَرَجَ بِلَالٌ فَنَادَى بِالصَّلَاةِ


Muslim-867

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

867. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்துவருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக்கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க்கொண்டார். பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து வந்து நட்டுவைப்பதை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கியொன்றை அணிந்தவர்களாக (தம் கணைக்கால்கள் தெரியுமளவுக்கு அங்கியை) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்தார்கள். பிறகு அந்தக் கைத்தடியை நோக்கி (நின்று) மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால்நடைகளும் கடந்துசெல்வதை நான் பார்த்தேன்.

أَنَّ أَبَاهُ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلَالًا أَخْرَجَ وَضُوءًا، فَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ ذَلِكَ الْوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ، ثُمَّ رَأَيْتُ بِلَالًا أَخْرَجَ عَنَزَةً فَرَكَزَهَا «وَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مُشَمِّرًا فَصَلَّى إِلَى الْعَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ بَيْنَ يَدَيِ الْعَنَزَةِ»