தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3228

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

விபச்சாரியை மணமுடித்தல் (கூடாது).

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் பலமான மனிதராக இருந்தார். மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார்.

(அவர் கூறுகிறார்):

நான் ஒரு மனிதரைத் தூக்கிச் செல்வதற்காக அவரை (என்னுடன் வருமாறு) அழைத்தேன். மக்காவில் அனாக் எனும் விபச்சாரி ஒருத்தி இருந்தாள். அவள்(நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) என்னுடைய காதலியாக இருந்தாள். (நான் அந்த மனிதரை அழைக்கச் சென்ற போது) அவள் வெளியே வந்து, சுவரின் நிழலில் என் உருவத்தைப் பார்த்துவிட்டாள். “இவர் யார்? மர்ஸதா?, மர்ஸதே! வருக, வருக! இவ்விரவின் இப்பயணத்தில் என்னிடம் தங்கிவிட்டுச் செல்வீராக!” என்று கூறினாள். (அப்போது நான் அவளிடம்) “அனாக்! திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விபச்சாரத்தைத் தடை செய்துள்ளார்கள்” என்று கூறினேன். உடனே அவள், “கூடாரங்களில் இருப்போரே! (மக்களே) இவர் (ஒரு) முள்ளம்பன்றி(யைப் போன்றவர்). இவர் உங்களுடைய கைதிகளை மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கொண்டுசெல்பவர்” என்று கூறி (என்னைப் பிடிக்கச் சொன்)னாள். உடனே நான் (மக்காவின் மலை) ‘கன்தமா’ நோக்கி ஓடிச் சென்றேன்.

என்னை எட்டுப்பேர் தேடி வந்தார்கள். அவர்கள் என் தலைக்கு மேல் வந்துவிட்டார்கள். (நான் கீழே ஒரு குகையில் ஒளிந்து கொண்டிருந்தேன்.) அங்கு அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். அவர்களின் சிறுநீர்ச் சாரல் என்மீது பட்டது. என்னைப் பார்க்க விடாமல் அல்லாஹ் அவர்க(ளின் கண்க)ளைக் குருடாக்கிவிட்டான்.

பிறகு நான் என்னுடைய அந்தத் தோழரிடம் வந்து அவரைச் சுமந்துகொண்டு ‘அராக்’ எனும் பகுதிக்கு வந்து, (அவர் மிகவும் கனமானவராக இருந்ததால் சுமை குறைய) அவருடைய (கையில் இருந்த) பெரிய விலங்கை உடைத்து (அவரை மதீனா கொண்டு வந்து) விட்டேன். பின்னர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அனாக் என்பவளைத் திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். அப்போது,

விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (அல்குர்ஆன்: 24:3) வது வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து என்னிடம் இந்த இறைவசனத்தை ஓதிக்காட்டி, “அவளை மண முடிக்காதே!” என்று கூறினார்கள்.

(நஸாயி: 3228)

تَزْوِيجُ الزَّانِيَةِ

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى هُوَ ابْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،

أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ، وَكَانَ رَجُلًا شَدِيدًا، وَكَانَ يَحْمِلُ الْأُسَارَى مِنْ مَكَّةَ، إِلَى الْمَدِينَةِ، قَالَ: فَدَعَوْتُ رَجُلًا لِأَحْمِلَهُ، وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا: عَنَاقُ، وَكَانَتْ صَدِيقَتَهُ، خَرَجَتْ فَرَأَتْ سَوَادِي فِي ظِلِّ الْحَائِطِ، فَقَالَتْ: مَنْ هَذَا مَرْثَدٌ، مَرْحَبًا وَأَهْلًا يَا مَرْثَدُ، انْطَلِقِ اللَّيْلَةَ فَبِتْ عِنْدَنَا فِي الرَّحْلِ، قُلْتُ: يَا عَنَاقُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ الزِّنَا، قَالَتْ: يَا أَهْلَ الْخِيَامِ، هَذَا الدُّلْدُلُ، هَذَا الَّذِي يَحْمِلُ أُسَرَاءَكُمْ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ، فَسَلَكْتُ الْخَنْدَمَةَ، فَطَلَبَنِي ثَمَانِيَةٌ، فَجَاءُوا حَتَّى قَامُوا عَلَى رَأْسِي، فَبَالُوا، فَطَارَ بَوْلُهُمْ عَلَيَّ، وَأَعْمَاهُمُ اللَّهُ عَنِّي، فَجِئْتُ إِلَى صَاحِبِي، فَحَمَلْتُهُ، فَلَمَّا انْتَهَيْتُ بِهِ إِلَى الْأَرَاكِ، فَكَكْتُ عَنْهُ كَبْلَهُ، فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقَ، فَسَكَتَ عَنِّي، فَنَزَلَتْ: {الزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ} [النور: 3]، فَدَعَانِي، فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ: «لَا تَنْكِحْهَا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3228.
Nasaayi-Alamiah-3176.
Nasaayi-JawamiulKalim-3194.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . இப்ராஹீம் பின் முஹம்மத்

3 . யஹ்யா பின் ஸயீத்

4 . உபைதுல்லாஹ் பின் அக்னஸ்

5 . அம்ர் பின் ஷுஐப்

6 . ஷுஐப் பின் முஹம்மத்

7 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


மேலும் பார்க்க: திர்மிதீ-3177 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.