Category: புஹாரி

Bukhari

Bukhari-5935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5935. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) கூறினார்:

ஒரு பெண் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார்.

எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்து விடட்டுமா?’ என்று கேட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள்.

Book :77


أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي أَنْكَحْتُ ابْنَتِي، ثُمَّ أَصَابَهَا شَكْوَى، فَتَمَرَّقَ رَأْسُهَا، وَزَوْجُهَا يَسْتَحِثُّنِي بِهَا، أَفَأَصِلُ رَأْسَهَا؟ ” فَسَبَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ


Bukhari-5934

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5934. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவரின் தலைமுடி கொட்டிவிட்டது. எனவே, அவரின் உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்’) என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.122

Book :77


أَنَّ جَارِيَةً مِنَ الأَنْصَارِ تَزَوَّجَتْ، وَأَنَّهَا مَرِضَتْ فَتَمَعَّطَ شَعَرُهَا، فَأَرَادُوا أَنْ يَصِلُوهَا، فَسَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ» تَابَعَهُ ابْنُ إِسْحَاقَ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنِ الحَسَنِ، عَنْ صَفِيَّةَ، عَنْ عَائِشَةَ


Bukhari-5933

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5933. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :77


«لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ»


Bukhari-5932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 83

ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்வது.

5932. ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப் (ரஹ்) அறிவித்தார்:

முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி) ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடையின் மீது நின்றுகொண்டு (மெய்க்) காலவர் ஒருவரது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்துக் காட்டி, ‘(மதீனாவாசிகளே!) உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இது போன்றதைத் தடை செய்து, ‘பனூஇஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் அவர்களின் பெண்கள் இதைப் பயன்படுத்தியபோது தான்’ என்று சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.121

Book : 77


أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ، وَهُوَ عَلَى المِنْبَرِ، وَهُوَ يَقُولُ، وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعْرٍ كَانَتْ بِيَدِ حَرَسِيٍّ: أَيْنَ عُلَمَاؤُكُمْ؟

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ، وَيَقُولُ: «إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ»


Bukhari-5931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 82

அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்கள்.119

5931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்:

பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! .

நபி (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே!

‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்’ (என்பதே அந்த (திருக்குர்ஆன் 59:7 வது) வசனம்).120

Book : 77


«لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى»

مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ} [الحشر: 7]


Bukhari-5930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 81

(‘தரீரா’ எனும்) வாசனைத் தூள்.118

5930. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதா) ‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரண்டு கைகளால் அவர்களுக்கு (‘தரீரா’ எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

Book : 77


«طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ بِذَرِيرَةٍ فِي حَجَّةِ الوَدَاعِ، لِلْحِلِّ وَالإِحْرَامِ»


Bukhari-5929

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 80

நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வது.

5929. ஸுமாமா பின் அப்துல்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 77


أَنَّهُ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ»


Bukhari-5928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 79

விரும்பத்தகுந்த நறுமணப் பொருள்.

5928. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிடமிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116

Book : 77


«كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ إِحْرَامِهِ بِأَطْيَبِ مَا أَجِدُ»


Bukhari-5927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 78

கஸ்தூரி பற்றிய குறிப்பு.

5927. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன்.

(மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.115

Book : 77


«كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ»


Bukhari-5926

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 77

தலை வாருவதும், அதை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பிப்பதும்.

5926. ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதே அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது.114

Book : 77


«أَنَّهُ كَانَ يُعْجِبُهُ التَّيَمُّنُ مَا اسْتَطَاعَ، فِي تَرَجُّلِهِ وَوُضُوئِهِ»


Next Page » « Previous Page