Category: புஹாரி

Bukhari

Bukhari-3038

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 164 போரின் போது சச்சரவு செய்து கொள்வதும், கருத்து வேறுபாடு கொண்டு தகராறு செய்து கொள்வதும் வெறுக்கத் தக்கது என்பதும், தன் தலைவருக்கு மாறு செய்பவரின் தண்டனையும்.

அல்லாஹ் கூறுகிறான்: ஒருவரோடொருவர் (பூசல் கொண்டு) சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். (அதனால்) நீங்கள் அச்சமும் பலவீனமும் கொண்டு விடுவீர்கள். உங்கள் வலிமை (பறி) போய் விடும். (8:46)

இங்கே வலிமை என்பது போர் வலிமையைக் குறிக்கிறது என்று கதாதா (ரஹ்) கூறுகிறார்கள்.

3038. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், ‘நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்’ என்று (அறிவுரை) கூறினார்கள்.
Book : 56


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى اليَمَنِ قَالَ: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا»


Bukhari-3037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 163 (ஈச்சம்) பாயை எரித்து அதனால் காயத்திற்கு சிகிச்சையளிப்பதும், ஒரு பெண் தன் தந்தையின் முகத்திலிருந்து (வழியும்) இரத்தத்தைக் கழுவுவதும், (அதற்காகத்) தண்ணீரைக் கேடயத்தில் அள்ளிச் சுமந்து வருவதும்.

3037. அபூ ஹாஸிம்(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்திற்கு எதனால் சிகிச்சையளிக்கப்பட்டது?’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘அதைப் பற்றி என்னை விட அதிகமாக அறிந்தவர்கள் எவரும் (தற்போது) மக்களில் எஞ்சியிருக்கவில்லை.

அலீ(ரலி) தம் கேடயத்தில் தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்தார்கள். மேலும், ஃபாத்திமா(ரலி), நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவிவிட்டார்கள். (ஈச்சம்) பாய் ஒன்று எடுத்து வரப்பட்டு, எரிக்கப்பட்டு அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதருடைய காயத்திற்கு (மருந்திட்டு)க் கட்டு போடப்பட்டது’ என்றார்கள்.
Book : 56


سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: مَا بَقِيَ مِنَ النَّاسِ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، «كَانَ عَلِيٌّ يَجِيءُ بِالْمَاءِ فِي تُرْسِهِ، وَكَانَتْ – يَعْنِي فَاطِمَةَ – تَغْسِلُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، ثُمَّ حُشِيَ بِهِ جُرْحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3036. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை’ என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன்.

நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
Book :56


وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لاَ أَثْبُتُ عَلَى الخَيْلِ، فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي، وَقَالَ: «اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا»


Bukhari-3035

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 162 குதிரையின் மீது சரியாக அமர முடியாதவர்.

3035. ஜரீர்(ரலி) அறிவித்தார்.

நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.
Book : 56


مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي


Bukhari-3034

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 161 போரில் ரஜ்ஸ் எனும் (ஒரு யாப்பு வகைப்) பாடலைப் பாடுதல் மற்றும் அகழ் தோண்டும் போது (பாடிக் கொண்டே) குரலை உயர்த்துதல்.

இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து, சஹ்ல் (ரலி) அவர்களும் அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

இது பற்றியே சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களுடைய முன்னாள் அடிமையான யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

3034. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது, (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை (கொட்டுமிடத்திற்கு) எடுத்துச் செல்பவர்களாகக் கண்டேன். எந்த அளவுக்கென்றால் அந்த மண், அவர்களின் மார்பின் முடியை மறைத்து விட்டிருந்தது… மேலும், நபி(ஸல்) அவர்கள் அதிகமான முடியுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:

இறைவா! நீ (கொடுத்த நேர்வழி) இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தருமமும் செய்திருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். எனவே, எங்களின் மீது அமைதியை இறக்கியருள். நாங்கள் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து. பகைவர்கள் எங்களின்

رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الخَنْدَقِ وَهُوَ يَنْقُلُ التُّرَابَ حَتَّى وَارَى التُّرَابُ شَعَرَ صَدْرِهِ، وَكَانَ رَجُلًا كَثِيرَ الشَّعَرِ، وَهُوَ يَرْتَجِزُ بِرَجَزِ عَبْدِ اللَّهِ

اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا … وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا
فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا … وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا
إِنَّ الأَعْدَاءَ قَدْ بَغَوْا عَلَيْنَا … إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا

يَرْفَعُ بِهَا صَوْتَهُ

 


Bukhari-3033

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 160 இவனால் தீங்கு நேரும் என்று அஞ்சப்படும் மனிதனிடம் எச்சரிக்கை உணர்வுடனும், தந்திரத்துடனும் நடந்து கொள்வது.

3033. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் உபை இப்னு கஅப்(ரலி) வந்து கொண்டிருக்க, இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே, அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் அவனைப் பார்க்க நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள்.

இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவனாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே, ‘ஸாஃபியே! இதோ முஹம்மத்!’ என்று கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படையாகப் பேசியிருப்பான்’ என்றார்கள்.
Book : 56


انْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ أُبَيُّ بْنُ كَعْبٍ، قِبَلَ ابْنِ صَيَّادٍ، فَحُدِّثَ بِهِ فِي نَخْلٍ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخْلَ، طَفِقَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَابْنُ صَيَّادٍ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا صَافِ هَذَا مُحَمَّدٌ، فَوَثَبَ ابْنُ صَيَّادٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَرَكَتْهُ بَيَّنَ»


Bukhari-3032

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 159 அலட்சியமாக இருக்கும் நிலையில் எதிரிகளை திடீரெனத் தாக்கிக் கொல்வது.

3032. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்?’ என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் அவனைக் கொல்ல வேண்டு மென்று தாங்கள் விரும்புகிறீர்களா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘அனுமதியளித்து விட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


«مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ»، فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأْذَنْ لِي، فَأَقُولَ قَالَ: «قَدْ فَعَلْتُ»


Bukhari-3031

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 158 போரில் பொய் சொல்வது.

3031. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார்? (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்துவிட்டான்’ என்றார்கள. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, ‘இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தருமம் (செய்யும்படி) கேட்டார்’ என்று (நபி(ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்’ என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டு விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)’ என்று (சலிப்பாகக் கூறுவது போல்) சொன்னார்கள். இவ்வாறு,

«مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ، فَإِنَّهُ قَدْ آذَى اللَّهَ وَرَسُولَهُ»، قَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ: أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأَتَاهُ، فَقَالَ: إِنَّ هَذَا – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَدْ عَنَّانَا وَسَأَلَنَا الصَّدَقَةَ، قَالَ: وَأَيْضًا، وَاللَّهِ لَتَمَلُّنَّهُ، قَالَ: فَإِنَّا قَدِ اتَّبَعْنَاهُ فَنَكْرَهُ أَنْ نَدَعَهُ، حَتَّى نَنْظُرَ إِلَى مَا يَصِيرُ أَمْرُهُ، قَالَ: فَلَمْ يَزَلْ يُكَلِّمُهُ حَتَّى اسْتَمْكَنَ مِنْهُ فَقَتَلَهُ


Bukhari-3030

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3030. நபி(ஸல்) கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :56


«الحَرْبُ خَدْعَةٌ»


Bukhari-3029

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3029. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் போரை ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
Book :56


«سَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الحَرْبَ خَدْعَةً»


Next Page » « Previous Page